கான்பரா: ஹோபர்ட் அனைத்துலக டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்தப் போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.
பெண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உக்ரேன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து விளையாடிய சானியா மிர்சா (வயது 33), ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா)- மியூ கட்டோ (ஜப்பான்) இணையைத் தோற்கடித்துக் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதையடுத்து காலிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே இணையை சானியா இணை நேற்று எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 6-2, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதிப் போட்டியில், ஸ்லோவேனியா - செக் குடியரசு ஜோடி தமரா ஜிதான்செக் மற்றும் மேரி பவுஸ்கோவாவை சானியா மிர்சா இணை சந்திக்க உள்ளது.
முதல் சுற்றின் வெற்றிக்குப் பிறகு, சானியா மிர்சா தனது மகன் இஜானுடன் இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.