இஸ்லாமாபாத்: தங்கள் நாட்டில் நடக்கும் ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்காவிடில் 2021 டி20 உலகக் கிண்ணப் போட்டிகளைப் பாகிஸ்தான் அணி புறக்கணிக்கப் போவதாக வெளியான செய்தியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான அரசதந்திர உறவுகள் மோசமடைந்ததால் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடியதில்லை. மாறாக, 2012ல் பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடியது.
இந்நிலையில், இவ்வாண்டு செப்டம்பரில் பாகிஸ்தானில் ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளன. ஆனாலும், இந்திய அணி அங்கு சென்று விளையாட அந்நாட்டு அரசு அனுமதி அளிக்காது என்றே தெரிகிறது.
அப்படி ஒருவேளை, இந்திய அணி தன் நாட்டிற்கு வராமல் போனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தங்களது அணியை அனுப்பமாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் வாசிம் கான் சொன்னதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால், தான் சொன்னது திரித்துக் கூறப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார் வாசிம் கான். “இந்தியாவில் எங்களது அணியின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாகவும் விசா பெறுவதில் சிரமம் இருக்கலாம் என்றுதான் கூறினேன். ஆயினும், இடைப்பட்ட காலத்தில் நிலைமை சீராகும் என்று நம்புகிறோம்,” என்றார் வாசிம்.
அத்துடன், “ஆசியக் கிண்ணப் போட்டிகளை நடத்த நாங்கள் விரும்புகிறோம். அதே நேரத்தில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படலாம். அதைப் பற்றி ஆசிய கிரிக்கெட் மன்றமே முடிவெடுக்க வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆசிய கிண்ண ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் நடக்கவிருந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அரசியல் பதற்றநிலையைத் தொடர்ந்து அவை ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.