மும்பை: கொரோனா கிருமி தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது வரை இந்தியா முழுவதும் இந்த கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகிக்கொண்டுள்ளது. இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் ஒவ்வொரு மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ற வகையில் படுக்கைகளை அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேற்கு வங்காளத்திலும் கொரோனா கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருவேளை சிகிக்சை அளிக்க இடம் தேவை என்றால் ஈடன் கார்டன் மைதானத்தில் வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள அறைகளை வழங்கத் தயாராக இருக்கிறோம் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “அரசு எங்களிடம் கேட்டால், நாங்கள் கொடுப்பதற்காக தயாராக உள்ளோம். இந்த நேரத்தில் இருந்து எது தேவையென்றாலும் அதைச் செய்ய இருக்கிறோம். இதில் எந்தவித பிரச்சினையும் இல்லை,” என்றார். சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராகப் பதவி ஏற்பதற்கு முன் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.