எம்டினா: யூரோ 2024 காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டமொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மால்டாவைச் சந்தித்த இங்கிலாந்து அதை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
அந்த ஆட்டத்தில் மத்திய திடல் பொறுப்பில் மிகச் சிறப்பாக ஆடிய ட்ரண்ட் அலெக்சாண்டர்-ஆர்னால்டை அந்தப் பொறுப்பில் நிரந்தரமாக விளையாட வைக்க தான் எண்ணியிருப்பதாக இங்கிலாந்து குழு நிர்வாகி கேரத் சவுத்கேட் கூறியுள்ளார்.
24 வயது அலெக்சாண்டர்-ஆர்னால்ட், கடந்த சில மாதங்களாக லிவர்பூல் குழுவில் மத்திய திடல் ஆட்டக்காரராக சிறப்பாக ஆடி வந்ததால், அதே பொறுப்பில் ஆடவைத்து சோதிக்க, நிர்வாகி கேரத் முடிவெடுத்தார். அவரது சோதனை வெற்றியளித்தது. அலெக்சாண்டர்-ஆர்னால்ட் சிறப்பாக ஆடி, ஒரு கோல் போட்டதுடன் மேலும் இரண்டு கோல் கள் போடப்படுவதற்கு உதவினார்.
இயல்பாக, தற்காப்பு ஆட்டக்காரராக விளையாடும் அலெக்சாண்டர்-ஆர்னால்ட், 2018ல் தேசிய குழுவில் இடம்பெற்றதிலிருந்து 19 முறைதான் அதற்காக விளையாடியுள்ளார். தற்காப்பு நிலையில் ஆட, ரீஸ் ஜேம்ஸ், கைல் வாக்கர் அல்லது கீரன் டிரிப்பியர் ஆகியோரை நிர்வாகி கேரத் தேர்வு செய்து வந்துள்ளார்.
இங்கிலாந்துக்காக அலெக்சாண்டர்-ஆர்னால்ட், ஹேரி கேன், காலும் வில்சன் ஆகியோர் கோல் போட்டனர். மால்டாவின் ஃபெர்னான்டினோ போட்ட சொந்த கோல் இங்கிலாந்துக்குச் சாதகமாக அமைந்தது.