ஆலந்தூர்: நிவர் புயலைத் தொடர்ந்து, சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக, ஏறத்தாழ 10,000 வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கி நின்றதால் தங்களால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், சில பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவு நீருடன் மழைநீரும் கலந்து ஆறாக ஓடுவதால் அங்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று முதன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் கரையைக் கடந்ததை அடுத்து, சென்னையிலும் இதன் பாதிப்பு உணரப்பட்டது.
இருப்பினும், இந்த நிவர் புயலால் சென்னையில் மிகப்பெரிய அளவில் மோசமான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த இரு நாட்களாகத் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் உள்ள சாலைகள் மழைநீரில் மூழ்கின.
குறிப்பாக, சென்னையின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
முடிச்சூர், மணிமங்கலம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளின் சாலைகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன.
ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆதம்பாக்கம் நியூ காலனி, பாரத் நகர், சக்தி நகர், நிலமங்கை நகர், சரஸ்வதி நகர் போன்ற பகுதிகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட தெருக்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. இந்தப் பகுதியில் உள்ள 3,000க்கும் அதிகமான வீடுகளை மழைநீர் சூழந்தது.
வேளச்சேரி ஆண்டாள் நகர், ஏ.ஜெ.எஸ்.காலனி, நேத்தாஜி காலனி போன்ற பகுதிகளில் உள்ள 5,000க்கும் அதிகமான வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியிருந்தது.
கிண்டி நரசிங்கபுரம், மசூதி காலனி, புதுத்தெரு, வண்டிக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 2,000 வீடுகளையும் மழைநீர் சூழ்ந்து நின்றது.
இப்பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்படாததால் தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி தேங்கி நின்றதாகவும் கூறப்படு கிறது.
இதற்கிடையே, நிவர் புயலால் 36 வருவாய் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களைக் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்துள்ளார்.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டதால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்து உள்ளோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு நிவாரணங்களை விரை வில் முதல்வர் அறிவிப்பார்,” என்று அைமச்சர் தெரிவித்துள்ளார்.