தமிழகத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று நள்ளிரவிலிருந்து நாளைக் காலைக்குள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், “தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும். அப்போது 155 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது.
“கடந்த 6 மணி நேரத்தில் புயல் மேற்கு நோக்கி 6 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. நேற்று இரவு 11.30 மணிக்கு கடலூருக்கு 310 கி.மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 320 கி.மீட்டர் தொலைவிலும் இருந்தது. சென்னைக்கு 380 கி.மீட்டர் தொலைவில் நகர்ந்து வருகிறது,”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதாலும் காற்றின் வேகம் வெகுவாக இருக்கும் என்பதாலும் சென்னையிலிருந்து கிளம்ப இருந்த 12 விமானங்களும் அங்கு தரையிறங்க இருந்த 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று 2 ரயில்களும் நாளை 3 ரயில்களும் 28ஆம் தேதி ஒரு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சுமார் 4,000 குழந்தைகள் உட்பட 24,166 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 500க்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
புயல் நகர்ந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், அந்த மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.