சென்னை: ஆசிரியர் பணி உள்ளிட்ட பல்வேறு அரசாங்க வேலை களையும் வாங்கித் தருவதாகக் கூறி 60 பேரிடம் ரூ.4 கோடிக்கு மேல் நம்பிக்கை மோசடி செய்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர்.
இந்த தம்பதிகள் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதால் அவர்களை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலிசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை போலிஸ் ஆணையர் அலுவலகத்தில் காந்தா, 42, என்பவர் அளித்த புகார் மனுவில், "எனது மகனுக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சத்தை கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சசி பிரியாவும், 43, அவரது கணவர் ரவிச்சந்திரபாபுவும், 51, பெற்றனர்.
"ஆனால், அவர்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. இதுகுறித்துக் கேட்டால் தகாத வார்த்தைகளில் உயிருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகின்ற னர்," என்று தெரிவித்திருந்தார்.
எனவே, தம்பதியர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
புகாரின்படி விசாரணை நடத்த போலிஸ் ஆணையர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவு போலிசாருக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில் மோசடி உறுதி யானதை அடுத்து, வடபழனியில் தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து மோசடிக்குப் பயன்படுத்திய போலி அரசு முத்திரையுடன் கூடிய கடிதங்கள், போலியான பணி நியமன ஆணைகள், 1 மடிக்கணினி, 10 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.