பாட்னா: பீகார் மாநில சட்ட மேலவையில் உள்ள 11 இடங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 11 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக மாநில சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநிலத் தலைமைச் செயலகத்திற்குச் சென்று அவர் தனது சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.
இதேபோல் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவி, மாநில அமைச்சர் சந்தோஷ் சுமன், முன்னாள் அமைச்சர் மங்கள் பாண்டே உள்ளிட்டோர் சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி தினம் நிறைவடைந்த நிலையில், மனுத் தாக்கல் செய்த 11 பேரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.