செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிருப்பாக்கம் பகுதியில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தாய் தெய்வ வழிப்பாட்டு கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரசேகர் தலைமையில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தாயை முதன்மைப்படுத்தும் சமூகத்தில் இத்தகைய வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ள பேராசிரியர் சந்திரசேகர், தற்போது கண்டெடுக்கப்பட்ட சிலை ஐந்தரை அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் உள்ளது என்றார்.
பெரிய கல்லில் தாய் தெய்வ உருவம் செதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
“தற்போதுள்ள சிலைகள் போல் தெளிவாக இல்லாமல், கைகள், பாம்புகள் போன்று வளைந்துள்ளன. விரல்கள் தனித்தனியாகக் காட்டப்பட்டுள்ளன. இது தொடக்ககால சிற்பங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்,” என்றார் சந்திரசேகர்.
இப்பகுதியில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.