இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டு ஒன்று அல்ஜூனிட் எம்ஆர்டி நிலையம் அருகே உள்ள கட்டுமானத் தளத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
எண் 60 கேலாங் லோராங் 23ல் அமைந்துள்ள கட்டுமானத் தளத்தில் காலை 9.15 மணியளவில் அந்த வெடிகுண்டைக் கட்டுமான ஊழியர் ஒருவர் கண்டறிந்ததாக அதிகா–ரிகள் தெரிவித்தனர். பின்னர் போலிஸ் சம்பவ இடத்திற்கு வந்தனர். பணியில் இருந்த கட்டுமான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனே வெளியேற்றப்பட்டனர்.
நண்பகல் 12.15 மணிவாக்கில் அந்தத் தெருவைச் சுற்றி தடுப்புவேலி போடப்பட்டது. ஏழு போலிஸ் வாகனங்கள் அந்த இடத்தில் கண்டறியப்பட்டன. அதையடுத்து வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் குழு ஒன்று அந்த வெடிகுண்டைச் சோதனை செய்தது.
வெடிகுண்டு அதன் வெடிக்கும் தன்மையை இழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற்பகல் 2 மணி வரை அந்த வெடிகுண்டு கட்டுமானத் தளத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. கட்டுமானத் தளத்தில் நாள் முழுவதும் வேலை நிறுத்தப்பட்டது.வெடிகுண்டை அகற்றுவதற்குத் தகுந்த உரிமம் உள்ள ஒப்பந்ததாரரை அணுகுமாறு கட்டுமான நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.