நோய்ப்பரவல் சூழலால் சவால்மிக்க ஆண்டாகக் கருதப்படும் 2020ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் நிறைவுசெய்தது சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ‘எம்டிஆர்’ உணவகம்.
சிங்கப்பூரின் 20 மருத்துவமனைகளில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு நேற்று காலை பழங்களை அனுப்பிவைத்தது அந்த உணவகம்.
எண் 438 சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள அந்த உணவகத்தில் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. கிட்டத்தட்ட 50,000 பழங்களை அட்டைப் பெட்டிகளில் அடைக்கும் பணியில் நேற்று காலை கலாசார, சமூக, இளையர் துறை நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பெரியசாமி குமரன், இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் ஆர் ஜெயசந்திரன் கைகொடுத்தனர்.
“நாம் அனைவருக்கும் சவால்மிக்க, இடையூறுகளுடனான ஆண்டாக 2020 அமைந்தது. பணியில் கடப்பாடு கொண்டு ஓய்வின்றி உழைத்த சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் சேவைக்கு நாம் அனைவரும் பெருமைக் கொள்கிறோம்,” என்றார் திரு எரிக் சுவா. எம்டிஆர் உணவகத்தின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் நோய்ப் பரவலைச் சமாளிக்க அரசாங்கம் எடுத்த முயற்சிகளைப் பாராட்டினார் தூதர் பெரியசாமி குமரன்.
“உலகிலேயே மிகவும் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இடமாக சிங்கப்பூர் உள்ளது,” என்று கூறிய அவர், அடுத்த ஆண்டு நம்பிக்கைமிக்க ஆண்டாகவும் சிறப்பான ஆண்டாகவும் அமையும் என்றார்.
இன்னும் வரும் மாதங்களில் மேலும் இயல்பான வாழ்க்கைமுறையை நாம் வாழக்கூடிய நிலை வரும் என்று நம்பிக்கைக் கொள்கிறேன்,” என்று உற்சாகமூட்டினார் அவர்.
கொவிட்-19 கிருமித்தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தன்னலமற்ற சேவையை வழங்கியுள்ளனர் என்று கூறிய அவர், இவ்வாண்டை நிறைவுசெய்ய அவர்களுக்கு நன்றி கூறும் விதத்தில் இந்த ஏற்பாட்டை உணவகத்தினர் செய்துள்ளனர் என்றார்.
ஏறத்தாழ கடந்த எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் இயங்கிவரும் இந்த நிறுவனம், கொவிட்-19 கிருமித்தொற்றை முறியடிக்க ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அரசாங்கம் செயல்படுத்திய அதிரடி நடவடிக்கையின்போது சூடான காப்பு, சிற்றுண்டிகளை இந்த உணவகம் மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார் அதன் செயல்பாட்டு இயக்குநர் திரு ராகவேந்திரா ஷாஸ்திரி.
“ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்த சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கும் மருத்துவத் துறைக்கும் மீண்டும் நன்றி கூற சிறந்த தருணமாக இது இருக்கும் என்று நினைத்தேன்,” என்றார் திரு ஷாஸ்திரி.
“இப்போது இல்லை என்றால் பிறகு எப்போது, என்று என்னிடமே நான் கேட்டுக்கொண்டேன்,” என்றார் அவர்.
ஏப்ரல் மாதத்தில் அதிரடி நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது தொண்டூழியத்தில் ஈடுபட முடிவெடுத்த திரு ஷாஸ்திரி, பாதுகாப்பு இடைவெளி தூதுவராக ஆக விண்ணப்பித்திருந்தார். அதை விட இன்னும் அதிகமான மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த
அவருக்கு பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவிசங்கர் டிடாபுர் ஆலோசனை வழங்கினார். தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சூடான சிற்றுண்டிகளையும் தேனீரையும் வழங்குவதாக முடிவெடுத்தார்.
வாரம் இருமுறை அந்த விநியோகத்தை திரு ஷாஸ்திரி மேற்கொண்டார்.