இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் 14 நாள்கள் பிரத்தியேக இடங்களில் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றியபின், மேலும் ஏழு நாள்கள் தங்களது வசிப்பிடத்தில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு நாளை 22ஆம் தேதி வியாழக் கிழமை இரவு 11.59 மணியில் இருந்து நடப்புக்கு வருகிறது.
தங்களுக்கான 14 நாள்கள் இல்லத் தனிமை உத்தரவை நாளை இரவு 11.59 மணிக்குள் நிறைவுசெய்யாதவர்களும் கூடுதலாக ஏழு நாள்கள் தங்களது வசிப்பிடத்தில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இருவார இல்லத் தனிமை உத்தரவின் முடிவிலும் கூடுதல் ஏழு நாள்கள் இல்லத் தனிமையின் இறுதியிலும் அவர்கள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவர். கட்டுமானம், கடல்துறை, செய்முறை தொழில்துறைகளைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள் தங்களது தாய்நாட்டில் இருந்து வந்தபின் 21 நாள்கள் இல்லத் தனிமை உத்தரவின்கீழ் இருக்கும் நடைமுறை தொடரும்.
இந்தியாவில் கொவிட்-19 பரவல் மோசமடைந்துள்ளதால் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் அல்லாதோருக்கான நுழைவு அனுமதி வழங்கப்படுவதும் குறைக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. வெளிநாட்டில் இருந்து வருவோர் மூலம் கிருமி தொற்றும் அபாயத்தைக் குறைக்கவும் பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்நடவடிக்கைகள் உதவும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.