ஜூரோங், பிடோக், செங்காங், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகள்
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் கடந்த மூன்று நாள்களில் அடிக்கடி சென்று வந்த இடங்கள் குறித்த விவரங்களைச் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான தகவலுடன் கூடிய நிலப்படம் நேற்று முதன்முதலாக வெளியிடப்பட்டது. சுகாதார அமைச்சின் கொவிட்-19 நிலவர இணையவாயிலில் அந்த நிலப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படத்தில் சிங்கப்பூர் நிலப்பரப்பு முழுவதும் துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மேற்கில் யுன்னான், ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல், கியன் டெக், ஜுரோங் ஆறு, கிழக்கில் கேலாங் ஈஸ்ட், பிடோக் நார்த், தெம்பனிஸ் ஈஸ்ட், வடகிழக்கில் செங்காங் டவுன் சென்டர், வடக்கில் செனோக்கோ சௌத், உட்லண்ட்ஸ் ஈஸ்ட் ஆகிய 12 பகுதிகளில் கொவிட்-19 நோயாளிகள் அடிக்கடி சென்றுவந்துள்ளனர். கடந்த மூன்று நாள்களில் 230க்கும் 560க்கும் இடைப்பட்ட கொரோனா நோயாளிகள் அங்கு அடிக்கடி சென்றுவந்துள்ளனர்.
வருகைபுரிந்த கொவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கையின் அடிப்படையில், சிங்கப்பூர் நிலப்பரப்பு ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, எளிதில் அடையாளம் காணும் வகையில் வெவ்வேறு வண்ணங்கள் தரப்பட்டுள்ளன. 230 முதல் 560 வரையிலான கொவிட்-19 நோயாளிகள் சென்றுவந்த பகுதிகள் உச்சப்பிரிவின்கீழ் வருகின்றன.
அந்த நிலவரத்திற்கேற்ப, மக்கள் தங்களின் நடமாட்டத்தையும் நடவடிக்கைகளையும் திட்டமிட்டுக்கொள்ள இந்த நிலப்படம் உதவும் என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
"அதிகமான கொவிட்-19 நோயாளிகள் சென்றுவந்த இடங்களில், அதே நேரத்தில் இருந்தவர்கள், அதற்கடுத்த பத்து நாள்களுக்கு தங்களது உடல்நிலையைக் கண்காணித்துக்கொள்ளவும் அவ்வப்போது தாங்களாக ஆன்டிஜன் விரைவுப் பரசோதனை செய்துகொள்ளவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்," என்று பணிக்குழு கூறியிருந்தது.
கொரோனா தொற்றியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அல்லது கிருமிப் பரவல் அதிகமாக இருந்த இடங்களுக்குச் சென்று வந்தவர்களிடம் அதுகுறித்துத் தகவல் தெரிவிக்க சேஃப்என்ட்ரி, டிரேஸ்டுகெதர் தரவுகள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் அக்குழு தெரிவித்திருந்தது.