வியன்னா: தஞ்சம் புகும் குடியேறிகளை ஆஸ்திரேலியா தீவுகளில் தங்க வைப்பதுபோல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் புகுவோரையும் தீவுகளில் தங்க வைக்கலாம் என ஆஸ்திரியாவின் வெளியுறவு அமைச்சர் செபாஸ்டியன் குருஸ் கருத்துரைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மாதிரியை அப்படியே பின்பற்ற முடியாவிட்டாலும் அந்தக் கொள்கையைப் பயன்படுத்தலாம் என்று 'டை பிரஸ்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட அவர், ஐரோப்பாவுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் அண்மையில் துருக்கியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து சந்தேகம் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் நாடிச் செல்லும் குடியேறிகள், அகதிகள் என அறியப்பட்டாலும் அவர்கள் ஆஸ்திரேலியா வில் தங்குவதற்கு அனுமதி அளிக்கும் விண்ணப்பங்கள் ஆராயப்படும் காலகட்டத்தில் நௌரு, பாப்புவா நியூ கினி போன்ற தீவுகளில் காலவரையறையின்றி தங்க வைக்கப் படுகின்றனர். 20ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக அமெரிக்கா விலும் இதுபோன்றதொரு நடைமுறை இருந்தது. சென்ற ஆண்டு 90,000 குடியேறிகளை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரியா தற்போது குடியேறிகள் அங்கு செல்வதற்கான கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.