டமாஸ்கஸ்: சிரியாவில் சில நாட்களுக்கு முன்பு மக்கள் மீது நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ் இருந்ததாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆதாரத்தை வெளியிட இருப்பதாகவும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்தத் தாக்குதலுக்கு சிரியா அதிபர் ஆசாத்தின் அரசாங்கமே காரணம் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.
சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளைக் குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையினரின் போர் விமானங்கள் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தின. இட்லிப் மாநிலத்தில் போராளிகளின் வசம் உள்ள பகுதியில் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 87 பேர் உயிரிழந்தனர். இந்த விஷவாயு தாக்குதல் நடத்தியது தாங்கள் அல்ல என்று ஆசாத் கூறி வருகிறார்.