மலேசியாவின் ஜோகூர் மாநில அரசாங்கத் தரவுத்தளத்தில் அதன் முதலமைச்சர் ஒஸ்மான் சபியானின் கல்வித் தகுதிநிலை பற்றிய விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
புத்ரா மலேசியா பல்கலைக்கழகத்தின் (யூபிஎம்) மாணவராக இருந்தபோது அங்கு தமது படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்று திரு ஒஸ்மான் 'த ஸ்டார்' செய்தித்தளத்திடம் தெரிவித்தார். தாம் ஒரு யூபிஎம் பட்டதாரி எனப் பல்வேறு இணையத்தளங்களில் குறிப்பிடப்பட்டது தமக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார். திரு ஒஸ்மான் யூபிஎம்மிலிருந்து பட்டக்கல்விச் சான்றிதழ் வாங்கியதாக மாநில அரசாங்கத் தரவுத்தளம் முன்பு குறிப்பிட்டதாகவும் இப்போது அந்த விவரம் அகற்றப்பட்டிருப்பதாகவும் 'த ஸ்டார்' கூறியுள்ளது.
கல்வித் தகுதிநிலை குறித்து கேள்வி கேட்கப்பட்டு வரும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர்களில் இவரும் ஒருவர்.