ஹாங்காங்: ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்களின் மூல காரணத்தை கடும் நடவடிக்கைகள் கொண்டு தீர்ப்பதை சீன அரசு விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சீன ஆதரவாளர் ஒருவர் கத்தி முனையில் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சில மணிநேரம் கழித்து சீனாவைச் சேர்ந்த முக்கிய அதிகாரி இவ்வாறு கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
‘ஒரு நாடு இரு ஆட்சி முறை’ என்ற அடிப்படையில் ஹாங்காங் ஆளுமையை பிரிட்டனிடம் இருந்து 1997ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டது சீனா. அங்கு தற்பொழுது தலைமை நிர்வாகியான கேரி லாம் பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் நெருக்கடியில் உள்ளார். இந்நிலையில்தான், அங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டங்களால் ‘ஒரு நாடு இரு ஆட்சி முறை’ என்ற ஹாங்காங் ஆட்சி முறை சீரழிந்து வருவதாக சீன துணைப் பிரதமர் ஹான் செங் கூறியுள்ளார்.
“சிறப்பு நிர்வாகப் பகுதியான ஹாங்காங் அரசு தானே முன்வந்து சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று திருவாட்டி கேரி லாமை சந்தித்த பின் அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
ஹாங்காங்கில் வீட்டு விலைகள் கட்டுப்படியாகக் கூடிய நிலையில் இல்லாததை அவர் குறப்பிட்டுப் பேசியதாக தெரிகிறது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் சீனாவிடமிருந்து சுதந்திரம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதை குறிப்பிட்டுக் கருத்துக்கூறிய சீன கம்யூனிசக் கட்சி, சீன அரசு பிரிவினை நடவடிக்கைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.
இதற்கிடையே, நேற்று சீன அரசு ஆதரவாளராக அடையாளம் காணப்படும் ஜுனியஸ் ஹோ என்ற சட்டமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஜுனியஸ் ஹோ, அவரது உதவியாளர், தாக்குதல் நடத்தியவர் ஆகியோர் காயங்களுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை எனினும் கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களை குற்றக் கும்பல் தாக்கியதன் தொடர்பில் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களுடன் ஜுனியஸ் ஹோ சிரித்துப் பேசி கை குலுக்கியதைப் பலர் நினைவுகூர்ந்தனர்.