சோல்: தென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்கள் சுமார் 4,000 பேரை மீட்டுக்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தென்கொரிய நாளேடு வெளியிட்ட தகவலை அமெரிக்க தற்காப்பு அமைச்சு மறுத்துள்ளது.
வடகொரியாவின் மிரட்டலிலிருந்து தென்கொரியாவைப் பாதுகாக்க சுமார் 28,000 அமெரிக்க வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். அவர்களில் 4,000 வீரர்களை திரும்ப அழைத்துக்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தென்கொரிய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தி உண்மையல்ல என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர், தென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களை மீட்டுக்கொள்ளும் திட்டம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருந்தார்.
தென்கொரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆகும் செலவுக்கு தென்கொரிய அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அது தொடர்பில் தென்கொரிய அதிகாரிகளுடன் அமெரிக்கா சென்ற வாரம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் தென்கொரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களை மீட்டுக் கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தென்கொரிய நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. அதனை பென்டகன் மறுத்துள்ளது.