சோல்: கிருமிப் பரவல் அச்சம் காரணமாக வடகொரியா கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
கிருமித்தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் தென்கொரியாவில் இருந்து வடகொரியாவிற்குள் தப்பியோடிவிட்டார். எனவே, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அவசரகால நிலையை அறிவித்தார். மேலும் கசோங் எல்லை நகரம் முடக்கப்பட்டது.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், குறிப்பிட்ட பகுதி மக்களைப் பரிசோதனையிடுவது, சோதனை கருவிகள், பாதுகாப்பு உடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 16ஆம் தேதி வரை வடகொரியா மேற்கொண்ட 1,211 கிருமித்தொற்று பரிசோதனைகளிலும் தொற்று இல்லை என்று முடிவு வந்ததாக வடகொரியா அறிக்கை அளித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு ராய்ட்டர்சுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் சுமார் 696 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.