பெட்டாலிங் ஜெயா: கொரோ னாவுக்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பானது, ஆற்றல்மிக்கது என்று மலேசிய அமைச்சர் கைரி ஜமாலுதின் உறுதிபட தெரிவித்தார்.
கொவிட்-19 தடுப்பூசிக்கு எதிரான தரப்பினரின் கருத்துகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் அவர் பேசினார். கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியும் வெறும் தண்ணீரைக் கொண்டு போடப்படும் ஊசியும் ஒன்றுதான் என்று அந்தத் தரப்பினர் கூறி வருகிறார்கள்.
இதேவேளையில், தடுப்பூசி போடப்பட்டவர்களில் சிலருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டு இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை மறுத்து நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத் துறை அமைச்சர் அகம்மது அம்சாத் ஹஷிமும் விளக்கம் அளித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குத் தொற்று ஏற்படக்கூடும் என்றாலும் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று அமைச்சர் கைரி விளக்கினார்.
மரணம் போன்ற கடும் பாதிப்புகளைத் தடுப்பூசி தடுத்துவிடும்என்று அவர் கூறினார்.
இதனிடையே, மலேசியாவில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு, தடுப்பூசி இயக்கத்திற்கு முன்பு இருந்த அளவைவிட 10 மடங்கு குறைவு என்று திரு அகம்மது அம்சாத் ஹஷிம் தெரிவித்தார்.
இரண்டு தவணை ஊசிகளைப் போட்டுக்கொண்ட பிறகும் 40 சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கு கொவிட்-19 கிருமி தொற்றிவிட்டது என்று சனிக்கிழமை தகவல்கள் வெளியாயின.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் புள்ளி விவரங்களை வெளியிட்டார்.
நாட்டில் 438,000 பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 40 என்பது மிகவும் குறைவு என்றார் அமைச்சர். கிருமி தொற்றிய 40 பேருக்கும் கடுமையான அறிகுறிகள் இல்லை என்பதையும் அவர் சுட்டினார். நாட்டில் தடுப்பூசி 2வது கட்டம் நேற்று தொடங்கியது.
இதனிடையே, கொவிட்-19 பிரச்சினைகளை அரசாங்கம் சரி வர கையாளவில்லை என்றும் நாட்டின் மன்னர் அண்மையில் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்குச் சென்று இருந்தபோது மலேசியாவில் அங்கீ கரிக்கப்படாத தடுப்பூசியை அங்கு போட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியானது குறித்தும் இணையவாசிகள் பலரும் கோபம் தெரிவித்தனர்.
என்றாலும் ஏஷியா சென்டினல் என்ற செய்தித்தளத்தில் வெளியான அந்தச் செய்தியை மலேசிய சுகாதார அமைச்சர் ஆதம் பாபா மறுத்தார்.
மலேசியாவில் சென்ற ஆண்டு கொவிட்-19 தலைகாட்டியது முதலே அரசு இரட்டை அணுகு முறையைக் கையாண்டு வருவதாக அந்த நாட்டு மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.