ஜெனீவா: இறந்து பிறக்கும் பிள்ளைகள் உட்பட ஆண்டுதோறும் ஏறக்குறைய 150,000 கைக்குழந்தைகளின் மரணத்திற்குக் காரணமாக விளங்கும் கிருமித்தொற்றுக்கு உடனடியாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்படி உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது.
‘குரூப் பி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (ஜிபிஎஸ்)’ என்ற அந்தக் கிருமியின் தாக்கம், குறைமாதக் குழந்தைப் பிறப்பிற்கும் உடற்குறைபாட்டிற்கும் முன்னர் நினைத்ததைக் காட்டிலும் பெரும் காரணமாக விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனமும் லண்டன் சுகாதார, வெப்பமண்டல மருந்துக் கல்விக் கழகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 100,000 கைக்குழந்தைகளின் இறப்பிற்கும் 50,000 குழந்தைகள் இறந்தே பிறப்பதற்கும் ‘ஜிபிஎஸ்’ கிருமியே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இக்கிருமி ஆண்டுதோறும் 40,000 கைக்குழந்தைகளிடம் நரம்பியல் பாதிப்பையும் ஏற்படுத்தி வருவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சராசரியாக, ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதுமுள்ள கர்ப்பிணிகளில் 15 விழுக்காட்டினர், அதாவது கிட்டத்தட்ட 20 மில்லியன் பேரின் பிறப்புறுப்பில் இந்த ஜிபிஎஸ் கிருமி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பெரும்பாலோரிடம் அறிகுறிகள் தெரியாவிடினும், மகப்பேற்றின்போது கர்ப்பிணிகளிடம் இருந்து இக்கிருமி பிள்ளைகளுக்கும் சென்றுவிடலாம்.
சிகிச்சை பெறாமல் விட்டுவிட்டால், மூளைச்சவ்வு அழற்சி ஏற்படலாம் என்றும் இரத்தத்தில் நச்சுப்பொருள்கள் கலந்துவிடலாம் என்றும் அது, உயிருக்கே அச்சுறுத்தலாக முடிந்துவிடலாம் என்றும் கூறப்படுகிறது.
‘ஜிபிஎஸ்’ பாக்டீரியம், பெரியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் குடல் பகுதிகளில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.