சிட்னி: கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு, சுனாமியால் டோங்கா தீவு பேரழிவைச் சந்தித்துள்ளதாக அதன் தூதர் நேற்று சொன்னார்.
எரிமலையின் சாம்பல் வான் அளவிற்குப் பரவியுள்ளதால், மீட்பு விமானங்களால் டோங்காவிற்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து, கப்பலில் நிவாரணப் பொருள்களை அனுப்புகிறது ஆஸ்திரேலியா.
பேரழிவால் உலகிடமிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள டோங்காவில் ஏற்பட்டிருக்கக்கூடிய உயிரிழப்புகள் குறித்தும் அச்சம் எழுந்துள்ளது.
நியூசிலாந்து பாதுகாப்புப் படையின் உளவு விமானங்களால் எடுக்கப்பட்ட படங்கள் மாங்கோ தீவில் ஒரு முழு கிராமமும் அழிக்கப்பட்டதையும் அருகிலுள்ள அட்டாட்டா தீவில் பல கட்டடங்கள் காணாமல் போனதையும் காட்டியதாக ஆஸ்திரேலியாவில் உள்ள டோங்காவின் துணைத் தலைவர் கர்டிஸ் கூறினார்.
பலர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் சொன்னார்.
பிரிட்டனைச் சேர்ந்த 50 வயது ஏஞ்சலா குளோவர் உட்பட இதுவரை இருவர் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டோங்கா போலிசார் நியூசிலாந்து தூதரகத்திடம் தெரிவித்தனர்.
முக்கிய தீவான டோங்கடாபுவில் 50 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டதோடு, டோங்காவில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
டோங்கடாபுவில் உள்ள கட்டடங்களைக் கிட்டத்தட்ட 2 செ.மீ. உயரத்திற்குச் சாம்பல் மூடியுள்ளதாகவும் அது கூறியது. குடிநீரும் மாசடைந்திருக்கும் என்பதால் செஞ்சிலுவை சங்கம் தண்ணீர் அனுப்பியுள்ளது.