சோல்: வடகொரியாவில் கிட்டத்தட்ட 10 நாள்களுக்குப் பிறகு முதல்முறையாக தொற்று அறிகுறியான காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200,000த்திற்கும் குறைவாக பதிவாகயுள்ளது.
டகொரியாவில் கடந்த 12ஆம் தேதி முதல்முறையாக கொவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு முடக்கநிலை நடப்பில் உள்ளது.
நகரங்களுக்கு இடையே கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் தினந்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று அறிகுறியான காய்ச்சல் உள்ளது கண்டறியப்பட்டு வந்தது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மேலும் 186,090 பேருக்கு தொற்று பரவல் அறிகுறியான காய்ச்சல் காணப்பட்டுள்ளதாக கேசிஎன்ஏ ஊடகச் செய்தி கூறுகிறது.
ஆனால், அவர்களில் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
இதுவரை அங்கு 2.6 மில்லியன் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் குணமடைந்துவிட்டதாகவும் அச்சசெய்தி கூறுகிறது.
இந்நிலையில் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் பேசிய நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன், கிருமிப் பரவல் கட்டுக்குள் வரத்தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.
இதே போக்கு நீடிக்க கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தீவிரமாக கண்காணிக்கவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
கிருமிப் பரவல் நிலைமைக்கேற்ப கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான திட்டங்களைத் தீட்டுமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.