டெஹ்ரான்: ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதையொட்டி அது பிரிட்டன், நார்வே நாடுகளைச் சேர்ந்த தூதர்களுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது. அந்த நாடுகளின் ஊடகங்கள் தவறான கருத்து ஏற்படும் வண்ணம் ஆர்ப்பாட்டங்களைப் பற்றித் தகவல் வெளியிடுகின்றன என்பது ஈரானின் குற்றச்சாட்டுகளில் ஒன்று.
ஆகக் கடைசி நிலவரப்படி ஆர்ப்பாட்டங்களில் மாண்டோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பானது. சுமார் 35 பேர் மாண்டதாக ஈரான் அரசாங்கத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சி ஒளிவழி தெரிவித்தது.
மாண்டோரில் குறைந்தது ஐந்து பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களில் நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மஹ்சா அமினி எனும் பெண் மரணமடைந்ததைத் தொடர்ந்து ஈரானின் பல முக்கிய நகரங்களில் கடந்த ஒரு வாரமாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்துள்ளன. 22 வயது குருதியப் பெண்ணான அவர் 'ஹிஜாப்' எனும் தலையங்கியை சரியாக அணியாததாகச் சொல்லப்பட்டதால் ஈரானின் நன்னடத்தை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். மூன்று நாள்களுக்கு மயக்க நிலையில் இருந்த அவர் மரணமடைந்தார்.