சோல்: தென்கொரியாவில் பணியிடத் துன்புறுத்தல் கடந்த ஐந்தாண்டுகளில் இரட்டிப்படைந்துள்ளது.
2023ஆம் ஆண்டில் பணியிடத் துன்புறுத்தல் தொடர்பாக 10,000க்கும் அதிகமான புகார்கள் அளிக்கப்பட்டதாக அந்நாட்டின் மனிதவள அமைச்சு ஏப்ரல் 7ஆம் தேதியன்று தெரிவித்தது.
2022ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 8,961ஆக இருந்தது.
இத்தகைய புகார்களைத் தென்கொரிய அரசாங்கம் 2019ஆம் ஆண்டிலிருந்து தொகுத்து வருகிறது.
2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பணியிடத் துன்புறுத்தல் தொடர்பாக 2,130 புகார்கள் அளிக்கப்பட்டன.
பணியிடத்தில் திட்டு வாங்குவது தொடர்பாக ஆக அதிகமானோர் புகார் அளித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 10,028 புகார்களில் 9,672 புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
356 புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிவரங்களைவிட தென்கொரியப் பணியிடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
துன்புறுத்தலுக்கு எதிராகப் புகார் அளித்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்ற அச்சத்தில் பலர் மௌனம் காப்பதாகக் கூறப்படுகிறது.