தனிப்பட்ட மனநிறைவுக்காக தொடங்கிய பொழுதுபோக்கை எதிர்கால சமுதாயத்திற்குத் தேவைப்படும் ஒன்றாக மாற்றுவதற்கு கார்த்திக் ராஜ் நாச்சியப்பன் (படம்), 19, ஒரு நல்ல உதாரணம். சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் கார்த்திக், புதியனவற்றைப் படைப்பதில் அதிக விருப்பம் கொண்டவர். தன் தொழில்நுட்ப அறிவையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்த இயந்திர மனிதவியல் சிறந்த துறையாக உள்ளது என்றார். இவர் மூன்று வயதாக இருந்தபோது பெற்றோருடன் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். அப்போது கார்த்திக் உலகளாவிய இந்திய அனைத்துலகப் பள்ளியில் படித்தார். 2008ல் ஏழு வயதாக இருந்தபோது அப்போதைய இந்திய அதிபர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தம் பள்ளிக்கு வந்ததுமுதல் தமக்கு அறிவியல் பாடத்தில் ஆர்வம் அதிகரித்ததாக இந்த இளையர் கூறகிறார்.
“அவர் என்னுடன் கைக்குலுக்கிய ஞாபகம் இன்னமும் எனக்கு உள்ளது. அத்துடன் டாக்டர் கலாம் சிந்தனையைத் தூண்டும் விதமாக உரையற்றினார்,” என்றார் கார்த்திக். பத்து வயதிற்கு முன்பாகவே சிறார்களுக்கான அடிப்படைநிலை அறிவியல் போட்டிகளில் கலந்துகொண்ட கார்த்திக், சென்னைக்குத் திரும்பியபோது அங்கும் பல்வேறு போட்டிகளுக்கான அறிவியல் வகுப்புகளில் சேர்ந்தார். தமது 13வது வயதில் முதல் இயந்திர மனிதனைப் பயிலரங்கு ஒன்றின் மூலமாகச் செய்யக் கற்றுக்கொண்டார்.
“எதிரே சுவர்கள் இருப்பதை உணரும் தானியக்க இயந்திரங்கள், குறிப்பிட்ட ஒரு பாதையில் வழுவாமல் செல்லும் இயந்திரங்கள், இரு சக்கர இயந்திர மனிதர்கள், கவச வாகன வடிவிலான இயந்திரங்கள் ஆகியவற்றை இதுவரை நான் உருவாக்கியுள்ளேன்,” என்றார் கார்த்திக்.
பதினைந்து வயதானபோது கார்த்திக் மீண்டும் குடும்பமாக சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். அகமது இப்ராஹிம் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலை மூன்றில் சேர்ந்த இவர், இந்நாட்டின் கல்வி முறைக்கு ஏற்ப மாற ஆரம்பத்தில் சிரமப்பட்டதாகத் தெரிவித்தார். “என் பேச்சில் இந்திய தொனி தூக்கலாக இருந்ததால் என்னைச் சிலர் கேலி செய்தனர். இருந்தபோதும் காலப்போக்கில் எனக்கு நண்பர்களாகினர்,” என்று அவர் கூறினார். பள்ளிப் பாடங்களிலும் தொடக்கத்தில் சிரமப்பட்டார். இந்தியாவில் தமிழ் மொழியை உயர்நிலை பள்ளி வரை படிக்காததால் இங்கு அவர் ‘பி’ பாடத்திட்டத்தின்கீழ் தமிழ் படித்தார்.
பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலையில் பதினைந்து புள்ளிகளைப் பெற்றார். தாம் விரும்பிய இயுனோயா தொடக்கக் கல்லூரிக்குத் தகுதிபெறாததால் பலதுறை தொழிற்கல்லூரிக்குச் சென்று பொறியியல் துறையில் பயில முடிவு செய்தார்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்தது முதல் அவரது கல்வி பிரகாசிக்கத் தொடங்கியது. தேர்வுகளில் சிறப்பாகச் செய்து வந்ததால் அவரது ஜிபிஏ புள்ளிகள், இப்போது 4க்கு 3.927 என்று உள்ளது. இவருக்கு ‘முன்மாதிரி மாணவர்’ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
பலதுறை தொழிற்கல்லூரியின்போது கார்த்திக் தொடர்ந்து அறிவியல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றார். போட்டி என வந்தாலே தாம் மிகவும் உற்சாகப்படுவதாகக் கூறும் இவர், வெற்றியைவிட அனுபவமே முக்கியம் எனக் கூறுகிறார். பல்வேறு மாணவர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த கார்த்திக், மாணவத் தூதுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் படிப்பதற்காக அதிக நேரம் செலவிட முடியவில்லை என்றார். “இருந்தபோதும் படிக்கும்போது நான் முழுக் கவனத்துடன் படிப்பேன்,” என்று கார்த்திக் கூறினார்.
இயந்திரவியலில் ஈடுபடத் தம் தந்தையும் பள்ளி விரிவுரையாளர்களும் பேராதரவு அளித்தனர். அத்துடன் சுய கற்றலிலும் அவர் அதிகம் ஈடுபட வேண்டியிருந்தது. “யூடியூப் காணொளிகள் மூலமாகத்தான் இயந்திரவியலின் பெரும்பகுதியைக் கற்றுக்கொண்டேன்,” என்றார். இயந்திரம் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கும் முன்னர் பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியதாக இருந்ததெனக் கூறினார்.
இயந்திர மனிதர்களை உருவாக்கத் துல்லியமான திட்டமிடுதல் தேவை. சிறு பிழை ஏற்பட்டால்கூட முயற்சி தோல்வியில் முடியலாம். பலமுறை வெளிநாடுகளிலிருந்து தாம் தருவிக்கும் இயந்திர பாகங்கள் சரியான அளவில் இல்லாமல் போக அதே பாகங்களை மீண்டும் வாங்கும்போது பணமும் நேரமும் விரயமாவதாக அவர் கூறினார். “ஆனால் ஓர் இயந்திரத்தை வெற்றிகரமாக முடிக்கும்போது அதில் கிடைக்கும் மனநிறைவே தனி,” என்றார். “மனதில் குறிக்கோளைப் பதிய வைத்தால் தொய்வுக்கும் சலிப்புக்கும் இடமில்லை,” என்றார்.
இந்தோனீசியாவின் பாண்டுங் நகரத்து பயிர் திடல்களில் இயந்திர மனிதர்களைப் பயன்படுத்தும் திட்டத்தையும் கார்த்திக் அங்குள்ள விவசாயிகளிடம் விளக்கிக் காட்டினார். மண்ணிலுள்ள அமிலத்தன்மையை அளவிட அந்த இயந்திரங்கள் உதவும் என்று தாம் கூறியது அங்குள்ளோரை வியக்கச் செய்ததாக கார்த்திக் தெரிவித்தார்.
‘செஸ்டோ ரோபோட்டிக்ஸ்’ இயந்திரவியல் நிறுவனத்தில் வேலைப் பயிற்சியில் சேர்ந்தபோது அவர் அங்கும் இயந்திர மனிதர்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. “வேலையிடச் சூழலில் இயந்திர மனிதர்கள் அங்குமிங்கும் செல்வதைக் காண்பது புதிய அனுபவமாக இருந்தது,” என்று அவர் கூறினார். இயந்திர மனிதர்களை இயக்கும் மத்திய கணினியைப் பயன்படுத்தவும் பழுதடைந்த இயந்திர மனிதர்களைச் சரிசெய்ய உதவவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தேசிய சேவைக்குப் பிறகு தேசிய பல்கலைக்கழகம் அல்லது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்புகிறார் இந்த இளையர். “தமது ஆர்வம் என்னவென்று அறிந்தவர்கள் அதில் விடாமுயற்சியுடன் தொடர்ந்து ஈடுபட்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்