ப. பாலசுப்பிரமணியம்
தற்போதைய கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தைக் கருதி, இளையர்கள் தங்களால் முடிந்த உதவியை சமூகத்திற்கு ஆற்றி வருகின்றனர். அந்த வரிசையில் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் 23 வயது கிரித்தி புஷ்பநாதன், தமது முழு நேரப் பணிக்கு இடையில் தொண்டூழியத்திற்கு நேரம் ஒதுக்குகிறார்.
அரசு சார்பற்ற ‘Transient Workers Count Too’ என்ற அமைப்பில் இவர் தொண்டூழியராக சேவையாற்றி வருகிறார். வெளிநாட்டு ஊழியர்கள், சிங்கப்பூரில் முறையாகவும் நியாயமாகவும் நடத்தப்படுவதற்கான கொள்கைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கும் ஒரு குரலாக இந்த அமைப்பு விளங்குகிறது.
இவ்வமைப்பு வழிநடத்தும் ஒரு திட்டம்தான் ‘த கஃப் ரோடு பிரோஜெக்ட்’ (The Cuff Road Project).வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்கும் இத்திட்டத்திற்காக கிரித்தி, வாரத்தில் நான்கு முறையாவது சேவையாற்றுவார்.
லிட்டில் இந்தியாவில் இயங்கி வரும் இத்திட்டத்தின்படி, ஒரு சராசரி உணவு வேளைக்காக குறிப்பிட்ட சில உணவகங்களில் 300 வெளிநாட்டு ஊழியர்கள் வரை வந்து போவது வழக்கம்.
அத்துடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலை இழந்த வெளிநாட்டு ஊழியர்கள்.
‘டோக்கன்’ முறையில் இவர்களுக்கு உணவு வழங்கப்படுவதை வழிநடத்தி வருவதுடன் கிரித்தியின் பணி நின்றுவிடுவதில்லை.
இந்த உணவு வேளை சந்திப்புகளின்போது அல்லது அமைப்பின் அலுவலகத்தில் ஏற்படுகின்ற சந்திப்புகளின்போது வெளிநாட்டு ஊழியர்களின் பிரச்சினையைக் கண்டறிந்து அதற்குத் தகுந்த உதவியைத் தங்களது அமைப்பின் பிரதிநிதியிடமிருந்து பெறுவதற்கு வழிகாட்டுவார். வேலையின்போது காயமடைந்தவர்கள், தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்துடன் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்களை இந்த அமைப்பு அடையாளங்கண்டு உதவிக்கரம் நீட்டுகிறது.
தற்போதைய கொவிட்-19 நிலவரத்தால் தொண்டூழியர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் தொடர்ந்து தம் பங்கைச் செவ்வனே ஆற்றிவருகிறார், செய்யும் காரியத்தில் மிகுந்த கடப்பாடு கொண்டுள்ள இந்த இளையர்.
“தற்போதைய கிருமித்தொற்று சூழலில் வெளிநாட்டு ஊழியர்களைப் பற்றி சிலர் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். சிலர் கொவிட்-19 மோசமடைந்ததற்கு அவர்கள்தான் காரணம் என குறைகூறுகின்றனர். இவர்களது சிந்தனையை மாற்ற முயல்வது கடினம். ஆனால் பெரும்பாலானோர் நடுநிலையான சிந்தனையைக் கொண்டுள்ளனர். அவர்கள் குறைகூறுவதில்லை, அதே சமயம் ஆதரவு நல்கவும் முன்வருவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் பற்றி தெரியாமல் இருக்கலாம்,” எனப் பகிர்ந்துகொண்டார் கிரித்தி.
கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் கட்டுப்பாடுகளால் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்துள்ளது என்று கிரித்தி சுட்டினா். கொவிட்-19 நிலவரத்தால் வெளி நாட்டு ஊழியர்களின் வாழ்க்கைச் சூழல் நாளுக்கு நாள் வேகமாக மாறி வருகிறது. இதனால் ஒவ்வொருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் எழுகின்றன என்று குறிப்பிட்டார் கிரித்தி.
இவர்களுக்கு உதவ எண்ணம் கொண்டோர், தான் சேவையாற்றி வரும் அமைப்பைப் போன்ற ஏதேனும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கலாம் எனக் கேட்டுக்கொண்டார்.
“வெளிநாட்டில் வாழும் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள ‘சிம்’ அட்டைகளை வாங்குவது போன்ற செலவுகளுக்கும் இந்த நன்கொடை பயன்படும். என்னைப் போலவே மற்ற இளையர்களும் கொவிட்-19 நிலவரம் எப்படி சமூகத்தினரைப் பாதிக்கிறது என்பதைப் பற்றி ஆழமாக அறிந்துகொண்டு இதர அமைப்புககளில் சேவையாற்ற முன்வருவர் என நம்புகிறேன்,” என்றார் கிரித்தி.