பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் புக்கிட் வியூ மாணவி துர்கேஸ்வரி கண்ணன் எப்போதுமே தமது கல்வியில் கண்ணும் கருத்துமாக இருந்து படித்து வந்தார். ஆனால் இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
அவர் எதிர்பார்த்த முடிவுகள் அவருக்குக் கிடைக்காமல் கடும் உழைப்புக்கு ஏற்ற மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவரைத் துன்புறுத்தியது.
இதன் காரணமாக, நாளடைவில் அவரது தன்னம்பிக்கையை இது பாதித்தது.
தமக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்பு பற்றி துர்கேஸ்வரி யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை.
இது அவர் உயர்நிலை இரண்டாம் வகுப்பில் பயின்றுகொண்டிருந்தபோது தாழ்வு மனப்பான்மைக்கு வழிவிட்டு அவ்வப்போது பதற்றத்தையும் உண்டாக்கியது.
நிலைமை மோசமடைய, பதற்றம் காரணமாக ஒருமுறை அரையாண்டுத் தேர்வுத்தாள் ஒன்றை அவர் எழுத முடியாமல் போய்விட்டது.
இந்நிலையில், துர்கேஸ்வரி உயர்நிலை மூன்றில் பயின்றுகொண்டிருந்தபோது அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.
இதில் பள்ளி ஆலோசகரான திரு நியாமின் பங்கு அதிகம் உள்ளது. தமது பிரச்சினைகள் பற்றி பள்ளி ஆலோசகரிடம் துர்கேஸ்வரி மனம்விட்டுப் பேசினார்.
ஒவ்வொரு வாரமும் திரு நியாம் துர்கேஸ்வரியின் நலனை விசாரித்து, மனதை நிலைப்படுத்தும், கவனத்தை அதிகரிக்கும் உத்திகளைக் கற்றுக்கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் மனதைத் திடப்படுத்தவும் தன்னிம்பிக்கையைக் கூட்டவும் இணைப்பாட நடவடிக்கைகளும் துர்கேஸ்வரிக்கு உறுதுணையாக இருந்தது.
பள்ளியின் மாணவர் மன்றத்தில் சேர்ந்து பள்ளி அளவிலான நிகழ்ச்சிகளை அவர் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக வழிநடத்தினார்.
அதோடு பள்ளியின் தரைப்பந்து குழுவில் இடம்பெற்று போட்டிகளில் பங்குபெற்றார்.
இதன்மூலம் கிடைத்த அனுபவங்களே அவருக்குப் புத்துணர்ச்சியையும் எதையும் சாதிக்கலாம் என்ற தைரியத்தையும் தந்தது.
படிப்படியாக துணிச்சல் பெறுவதை துர்கேஸ்வரி உணர்ந்தார்.
பள்ளி ஆசிரியர்களும் குடும்ப உறுப்பினர்களும் இவருக்கு உறுதுணையாக இருக்க, கல்வியில் சிறந்தோங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி அவர் ‘ஓ’ நிலை தேர்வுக்காக தயாரானார்.
கடந்தாண்டு தொடக்கத்தில், சிண்டா ‘ஸ்டெப்’ அறிவியல், கணித துணைப்பாட வகுப்புகளில் அவர் சேர்ந்தார்.
ஆண்டின் நடுவில் ‘ஓ’ நிலை தமிழ்மொழிப் பாடத்தில் தேர்ச்சிபெற்றது ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.
அண்மையில் ‘ஓ’ நிலைத் தேர்வின் முடிவுகள் வெளியாகின. அதில் தமது எதிர்பார்ப்பையும் மிஞ்சி சிறப்பாக தேர்ச்சி பெற்றார் துர்கேஸ்வரி.
ஆங்கிலம் உட்பட சிறந்த ஐந்து பாடங்களில் (L1R4) இவர் 7 புள்ளிகள் பெற்று நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சமூக சேவை தொடர்பான பட்டயக்கல்வியை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.
“என் பள்ளி ஆலோசகர் எனக்குக் கொடுத்த ஊக்கம் போன்று நானும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்,” என்று கூறினார் 17 வயது துர்கேஸ்வரி.
“பிரச்சினை ஏற்பட்டால் உதவி நாட தயங்காதீர்கள். எப்போதும் இலக்கை நினைவில் கொண்டு விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்,” என்கிறார் சமூக சேவை துறையில் முத்திரை பதிக்க ஆவலுடன் துடிக்கும் துர்கேஸ்வரி.