டான் டோக் செங் மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த குமாரி சலத்தையன் மேரி சுமதிக்கு உறவுகளுடன் இணைந்திருக்க தொலை பேசிதான் உதவுகிறது. செஞ்சிக் கோட்டையில் வசிக்கும் அம்மா, சென்னையில் வாழும் அக்கா என உறவுகளுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் மேரி அன்று அக்காவைத் தொடர்புகொள்ள முயன்றபோது தொடர்பு கிடைக்கவில்லை. அச்சமயம் தொலைக்காட்சியில் அவர் பார்க்க நேர்ந்த கோரக் காட்சிகள் அவரை அதிரவைத்தன. நூறாண்டுகள் கண்டி ராத மழையினால் சென்னை தத்தளித்துக் கொண்டிருந்தது.
அக்காவைத் தொடர்புகொள்ள முடி யாமல் தவித்ததை ஓராண்டு கழித்து நினைக்கும்போதும் மேரிக்குப் பதற்றமாக இருக்கிறது. இறுதியில் சென்னையில் வசிக்கும் நண்பர் மூலம் அக்காவைத் தொடர்புகொண்டு அவரது கண்ணீர் மல்கிய குரலைக் கேட்டபிறகு ஏற்பட்ட நிம்மதியை இப்போதும் மறக்க முடியாது என்றார் 27 வயது மேரி. ஓராண்டுக்கு முன்னர் சென்னையைப் புரட்டிப்போட்ட வரலாறு காணாத அந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் கண்டு உடனடியாக உதவிக்கரம் நீட்ட முயற்சிகளை மேற்கொண்ட பலருடன் மேரியும் இணைந்தார்.
தச்சம்பாளையம் அருகிலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லத்தில் உணவுப் பொருட்கள், உடைகள் போன்ற வற்றை இல்லவாசிகளுக்கு வழங்கினார் மேரி (இடது கோடியில் நீல நிறச் சட்டை அணிந்திருப்பவர்). படம்: மேரி