கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் எதிக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தீர்மானிக்க முடியாது என்று கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். பிரதமர் வேட்பாளர் யார் என்பதை 'பக்காத்தான் ஹரப்பான்' கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் ஒருமித்த முடிவு எடுப்பார்கள் என்றும் திரு அன்வார் கூறினார். பிரதமராக யாரும் தாமாகவே முன்வரக்கூடாது என்றும் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த முடிவு அவசியம் என்றும் அவர் சொன்னார். நேற்று நீதிமன்ற விசாரணைக்கு வந்திருந்த அன்வார், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். திரு அன்வார்தான் பிரதமர் வேட்பாளர் என்று கெஅடிலான் கட்சி கூறி வருகிறது.
இந்நிலையில் பெர்சத்து கட்சித் தலைவர் மகாதீர், தன்னைப் பிரதமராக்க பக்காத்தான் தலைவர்கள் விருப்பப்பட்டால் தாம் அதைப் பற்றி பரிசீலிக்க வாய்ப்பு உண்டு என்று இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். அடுத்த பொதுத் தேர்தலில் 'பக்காத்தான் ஹரப்பான்' கூட்டணி வெற்றி பெற்றால் மகாதீரை பிரதமராக்கும் கனவை பெர்சத்துக் கட்சி நிறுத்திகொள்ள வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவர் சம்சூல் இஸ்கந்தார் தெரிவித்துள்ளார்.