மனிதவள அமைச்சின் அங்கீகாரம் பெற்ற வேலைப்பயிற்சி வழங்கும் நிறுவனம், வேலையிட பாதுகாப்பு, சுகாதாரம் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களைத் தயாரித்து பயிற்சிக்கு வராத வெளிநாட்டு ஊழியர்களிடம் விற்பனை செய்துள்ளது. பைனியர் ஸ்கில் டிரெய்னிங் சென்டர் நிறுவனத்தின் இயக்குநர் முகமது அபு ஜஹின் மொஸ்தஃபிஜுர் ரஹ்மான், 36 கட்டட கட்டுமான மேற்பார்வையாளர்கள் பாதுகாப்பு பயிற்சியை முடித்ததற்கான சான்றிதழ்களை அக்டோபர் முதல் நவம்பர் 2015 வரை ஐந்து முறை போலியாக தயாரித்ததை ஒப்புக்கொண்டார்.
நேற்று அவருக்கு 10 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பின்போது பங்ளாதேஷில் பிறந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர் மீதான மேலும் ஒன்பது குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. போலியாக அவர் தயாரித்த சான்றிதழ்கள், ஊழியர்கள் வேலையிடத்தில் முறையான பாதுகாப்புடனும் சுகாதார பயிற்சியுடனும் வேலைசெய்கிறார்களா என்பதை உறுதிசெய்யும். இந்த சான்றிதழை பெறாத எவரையும் முதலாளிகள் மேற்பார்வையாளர்களாக தங்கள் நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள முடியாது.