பெர்லின்: தீவிர இயந்திரக் கோளாறு காரணமாக நேற்று 'ஏர் பிரான்ஸ் A380' விமானம் ஒன்று கனடாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த 500க்கும் மேலானவர்கள் உயிர் தப்பினார்கள். பாரிசில் இருந்து லாஸ் ஏஞ்சலிசை நோக்கிப் பறந்து கொண்டிருந்த இந்த விமானத்தின் ஒரு பகுதி திடீரென்று செயலிழந்தது. அவ்விமானத்தில் 496 பயணிகளும் 24 விமானப் பணியாட்களும் பயணம் செய்தார்கள். சேதமடைந்த விமானத்தின் இயந்திரப் பகுதிப் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின. "திடீரென்று பலத்த சத்தம் கேட்டது. பின்னர் அதிர்வுகளுடன் விமானம் கீழ் நோக்கிப் பாய்ந்தது. சிலர் கத்தினார்கள். நாங்கள் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அறிந்தோம். அச்சம் கொண்டோம்," என்று பயணி ஒருவர் கூறினார். விமானத்தின் பாதை மாற்றப்பட்டு கிழக்கு கனடாவில் உள்ள ராணுவ விமானத் தளத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது என்றும் அதிலிருந்த 520 பேரும் காயம் ஏதுமின்றி வெளியேற்றப்பட்டனர் என்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாகத் தரையிறக் கப்பட்டது. படம்: டுவிட்டர்