ஜார்ஜ் டவுன்: பினாங்கு மாநிலத்தை முடக்கியுள்ள பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மலேசிய சுற்றுச்சூழல், இயற்கை வளத் துறை அமைச்சு 4.3 பில்லியன் ரிங்கிட்டை (US$1.01 பில்லியன்) 16 வெள்ள நிவாரணத் திட்டங்களுக்காகச் செலவிட இருப்பதாக நேற்று அத்துறை அமைச்சரான வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபார் தெரிவித்தார். இம்மாதம் முதல் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நாடளாவிய நிலையில் 16 வெள்ள நிவாரணத் திட்டங்களுக்குச் இந்தத் தொகை செலவிடப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். வடிகால்களும் அணைக்கட்டுகளும் இந்தத் திட்டங்களில் அடங்கும் எனவும் கூறப்பட்டது. "படிப்படியாக வெள்ளப் பிரச்சினையை இதன்வழி தீர்க்க முடியும். இதன் பிறகு, மலேசியாவில் அதிகமான வெள்ளப்பிரச்சினையை சமாளிக்க முடியும். ஆனால், இதுபோன்ற திடீர் வெள்ளப்பிரச்சினை ஏற்படும் போது மாநில அரசும் மாநகராட்சி மன்றங்களும் தங்கள் வட்டாரங் களில் வடிகால் அமைப்பை மேம் படுத்த வேண்டும்" என அமைச்சர் வான் ஜுனைடி கூறினார்.
பினாங்கு மாநிலத்தின் சுங்கை டூவா பகுதியில் உள்ள தாமான் டேசா முர்னியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. படம்: தி ஸ்டார்