செங்காங் ஈஸ்ட்டில் இருக்கும் 'அகாபி லிட்டில் யூனி' என்ற குழந்தை பராமரிப்பு நிலையம் மற்றும் பாலர்பள்ளியில் உள்ள எல்லா பிள்ளைகளுக்கும் காசநோய் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஒருவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து எல்லா பிள்ளைகளுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இரண்டு முதல் ஆறு வயதுள்ள அந்தப் பிள்ளைகள் டிசம்பர் 4ஆம் தேதி முதல் சோதிக்கப்பட்டனர். டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தாதி ஒருவர், அந்த பாலர்பள்ளிக்குச் சென்று பிள்ளைகளைச் சோதித்தார்.
இதற்கு முன்னதாக அந்தப் பிள்ளைகளின் பெற்றோருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. வயது அதிகம் உள்ள பிள்ளைகளுக்கு வியாழக்கிழமை இரண்டாவது சோதனை நடத்தப்பட்டது. காசநோய் என்பது தொற்றுநோயாகும். அந்த நோய்க்கிருமி தொற்றியிருக்கும் ஒருவர் இருமினால், பேசினால், கிருமிகள் மற்றவர்களை ஒட்டிக்கொள்ளும் ஆபத்து உண்டு.