தனிப்பட்ட ஒருவரின் இறப்புக்காக கிட்டத்தட்ட ஒன்றரை நாள் ஓர் இந்துக் கோயில் அண்மையில் மூடப்பட்டது. தனிமனித போற்றல்களுக்கு இடமில்லாத, அனைத்து மக்களும் சமமாகப் பாராட்டப்படும் சிங்கப்பூரில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
யீஷூன் மகாமாரியம்மன் கோயிலின் தலைவர் டிசம்பர் 8ஆம் தேதி மரணமடைந்ததை ஒட்டி, அந்தக் கோயில் அன்று மாலை முதல் மறுநாள் வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்பட்டது. இந்துக்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாள். அன்று அதிகமானோர் கோயிலுக்குச் செல்வார்கள். அப்படிப்பட்ட நாளில், தனி ஒருவரின் இறப்புக்காகக் கோயிலை மூடியது சிங்கப்பூர் இந்துக்களிடையே பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டது.
மேலும், இறந்தவரின் இறுதி ஊர்வலம் கோயில் வழியாகச் சென்றதுடன், கோயில் வாசலில் தீப, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் இந்துக் கோயில்களுக்கும் இந்து விவ காரங்களுக்கும் பொறுப்பு வகிக்கும் இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "ஒரு தேசிய தலைவர், சமூகத் தலைவர், ஆலயத் தலைவரின் மறைவின் காரண மாக ஆலயத்தை மூடுவது சிங்கப்பூர் சூழ்நிலைக்குப் பொருந்தாது. அப்படிச் செய்வதும் கூடாது," என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கோயில் தலைவரின் தகனச் சடங்குகள் முடியும்வரை ஆலயத்தை மூடிவைக்கலாம் என்று அதன் தலைமை அர்ச்சகர் கூறிய ஆலோசனையின்படி கோயில் மூடப் பட்டதாக மகாமாரியம்மன் ஆலய நிர்வாகக் குழு விளக்கம் அளித்தது. அதேநேரத்தில், ஆலயம் மூடப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து சிரமங்களுக்கும் கோயில் நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
சமய உணர்வுகளுடன் மனித உணர்வுகளையும் பாதித்த நிகழ்வு இது. கடவுளுக்கு முன் அனைத்து உயிர்களும் சமம் என்பதே எல்லா சமயங்களும் வலியுறுத்தும் ஒன்று. வழிபாட்டு இடங்களில் பெரியவர்- சிறியவர், தலைவர்-தொண்டர் போன்ற வேறுபாடுகள் பார்க்கப்படுவதில்லை.
பொது வழிபாட்டிடம் என்பது மக்களுக்கானது. அதனை நிர்வகிப்பவர்களுக்கானது அல்ல. அவர்கள் பக்தர்களுக்குச் சேவை செய்பவர்கள். மக்களின் துயர் நீக்க உதவுவதே அவர்களது கடமை. மக்களுக்கு மனக்குறையோ சங்கடமோ சகுனம் சரியில்லாத நிலையோ அவர்களால் ஏற்பட்டுவிடக்கூடாது.
முழுவிவரம் : அச்சுப்பிரதியில்