கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சிங்கப்பூர் ராட்டினம் இயங்காமல் இருக்கிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிங்கப்பூர் ராட்டினம் தற்காலிகமாக இயக்கப்படாது என்று கடந்த மாதம் 25ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக சிங்கப்பூர் ராட்டினத்தை இயக்கும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
"நிலைமையைச் சரிசெய்ய நியமனம் செய்யப்பட்டுள்ள சுயேட்சை நிபுணத்துவப் பொறியாளருடன் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். பாதுகாப்புக்கு நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். தேவையான அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்ட பிறகே சிங்கப்பூர் ராட்டினத்தை மீண்டும் இயக்கத் தொடங்குவோம்," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். சிங்கப்பூர் ராட்டினம் இயங்காததற்குக் காரணமான தொழில்நுட்பக் கோளாறு குறித்து மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.