ஒரு கண்டத்திற்கு உரிய அத்தனை இயற்கை இயல்புகளையும் கொண்ட இந்தியா துணைக் கண்டமாகத் திகழ்கிறது. பல மொழி, பல கலாசார பூமியாக இருக்கின்ற அந்த நாடு, பல மாநிலங்களாக மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருக்கிறது.
இருந்தாலும் காடுகள், மலைகள், நதிகள் போன்ற பிளவுபடாத இயற்கை வளங்களை எல்லா மாநிலங்களும் பகிர்ந்து பயன்படுத்தி வருகின்றன. வற்றாத ஜீவநதிகளும் குறிப் பிட்ட பருவத்தில் மட்டும் நீர் நிரம்பி ஓடும் ஆறுகளும் அந்த நாட்டில் அதிகம்.
அத்தகைய ஆறுகளின் நீரை மாநிலங்கள் பங்குபோட்டு பிரித்துக்கொள்ளும்போது, இன்று நேற்றல்ல, சுதந்திர இந்தியா தோன் றியது முதலே பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 'நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டம்' 1956ல் இயற்றப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 262வது பிரிவின்படி, நாட்டின் நதிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க மத்தியில் அமையும் அரசுக்கு முழு அதிகாரத்தையும் அந்தச் சட்டம் வழங்குகிறது.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இது நாள்வரையில் குறிப்பாக வட இந்தியாவில் பக்ரா-பியாஸ், நர்மதை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகளின் நீர் தொடர் பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மேலாண்மை வாரியங்கள் அமைக்கப்பட்டு அவை இன்னமும் வெற்றிகரமான முறையில் செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும் தெற்கே கர்நாடகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய நான்கு மாநிலங் களுக்குப் பொதுவான காவிரி ஆற்றுப் பிரச்சினை மட்டும் இன்றுவரை தீராமலேயே நீடித்துக்கொண்டே போகிறது.
'பொன்னி' என்று குறிப்பிடப்படும் காவிரி ஆறுதான் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் உயிர்நாடி. காவிரி கர்நாடகாவில் உற்பத்தி யாவதால் காவிரி நீரை தமிழ்நாடு பெறுவதும் பெறாமல் இருப்பதும் கர்நாடகாவின் கையி லேயே இருந்து வருகிறது.
காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற் காகவே காவிரி நடுவர் மன்றம் என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு என்ற இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி காவிரி நதிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று 2007ல் அந்த அமைப்பு இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டது. ஆனாலும் மத்திய அரசுகள் செவிசாய்க்கவே இல்லை.
இத்தகைய நிலையில்தான் உச்சநீதிமன்றம் காவிரி விவகாரம் தொடர்பில் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது.
ஆறு வார காலத்திற்குள் ஓர் ஏற்பாட்டு முறையை மத்திய அரசாங்கம் நடைமுறைப் படுத்தவேண்டும் என்றது உச்சநீதிமன்றம்.
அந்த ஏற்பாட்டு முறைதான் 'காவிரி மேலாண்மை வாரியம்', 'காவிரி ஒழுங்காற்றுக் குழு' என்று தமிழ்நாடு வாதிட்ட நிலையில், கர்நாடகமோ அதற்கு வேறுவிதமான அர்த் தத்தைக் கற்பித்தது. இதற்குள்ளாக, ஆறு வார காலக்கெடு முடிந்து காவிரிப் பிரச்சினை வேதாளம்-முருங்கைமரம்போல் உச்ச நீதிமன் றத்துக்கே மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டது.
காவிரி வாரியத்தை அமைக்காத மத்திய அரசாங்கத்தை எதிர்த்து தமிழக அரசு வழக் குத்தொடுக்க, இவ்வளவு காலமும் சும்மா இருந்த மத்திய அரசோ உச்சநீதிமன்றத்திடம் 'நீங்கள் தீர்ப்பில் குறிப்பிட்ட ஏற்பாட்டு முறை என்பதற்கு என்ன பொருள்' என்று கேட்டு மேலும் காலஅவகாசம் கோரியது. இதுநாள்வரையில் காவிரி நீரை மத்திய, மாநில அரசியல் கட்சிகளின் விளையாட்டு கள்தான் வழிநடத்தி இருக்கின்றன. காவிரி பிரச்சினை அரசியல் கடலில் சங்கமமாகிப் போகும் ஒன்றாகவே இருந்துவருகிறது.
இப்போது, மத்திய பாஜக அரசாங்கம் காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டை கண்டும் காணாமல் நடந்துகொள்வதற்கு அடுத்த மாதம் கர்நாடகாவில் நடக்கவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலே முக்கியமான காரணம் என்று யூகிக்கப்படுகிறது.
காவிரியைப் பொறுத்தவரை கர்நாடகாவும் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் தொடர்ந்து தனக்கு அநீதி இழைத்தபடியே இருந்து வரு கின்றன என்று எண்ணி எண்ணி ஏங்கும் தமிழ்நாடு, வேறு வழி இல்லாமல் போராட்டங் களில் குதித்திருக்கிறது.
ஆற்றுநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அதிகாரம், ஆறுகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ள மத்திய அரசுதான் காவிரி பிரச்சினையை தீர்வை நோக்கிய ஒழுங்கான பாதையில் திருப்பிவிடமுடியும்.