தமிழவேல்
பிரதமர் லீ சியன் லூங், கோலாகலமாக நேற்று நடந்தேறிய சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் குடமுழுக்கு விழாவிற்கு வருகை அளித்து சிறப்பு சேர்த்தார். திரு லீ, கடந்த 2004ல் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் இந்து ஆலயத்தின் குடமுழுக்கு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. அதற்காக விழாவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும் குடமுழுக்கு விழாவிற்கு வந்திருந்த 40,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மனநிறைவுடன் குடமுழுக்கைக் காணவும் ஆலயத்தினுள் சென்று வழிபடவும் 1,500 தொண்டூழியர்களின் உதவியுடன் சீரான, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் ராஜகோபுரத்திற்கும் மற்ற ஆலயக் கலசங் களுக்கும் காலை 10.50 மணியளவில் புனித நீர் ஊற்றப்பட்டது. கிட்டத்தட்ட 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம், கடந்த 1978ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட $4.5 மில்லியன் செலவில் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்ட ஆலயம் நேற்று 4வது குடமுழுக்கு விழாவைச் சிறப்பாக நடத்தியது.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (இடமிருந்து) இந்து ஆலோசனை மன்றத் தலைவர் ராஜன் கிருஷ்ணன், பிரதமர் லீ சியன் லூங், இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் ஆர் ஜெயசந்திரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்