மியூனிக்: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் உலகக் கிண்ண வெற்றியாளர் பிரான்சுக்கு எதிராக ஜெர்மனி நேற்று அதிகாலை களமிறங்கியது. இதில் இரு குழுக்களும் கடுமையாகப் போட்டியிட, ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஜெர்மனியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போனது. முதல் சுற்றிலேயே வெளியேறிய ஜெர்மனி, தற்போது தனது குழுவை வலுப்படுத்தும் முயற்சி யில் தீவிரம் காட்டி வருகிறது. பிரான்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் பிற் பாதியில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து பல தாக்குதல் களை நடத்திய ஜெர்மனி, பிரான்ஸை நிலைதடுமாறச் செய்தது.
இருப்பினும், ஜெர்மனியின் கோல் முயற்சிகளை பிரான்ஸ் கோல்காப்பாளர் அல்போன்ஸ் அரியோலா அருமையாகத் தடுத்து நிறுத்தினார். "இது ஒரு நல்ல துவக்கம். வெறும் பெயருக்காக தேசிய குழுவின் சீருடையை நாங்கள் அணிந்திருக்கவில்லை என்பதை இது ரசிகர்களுக்குக் காட்டுகிறது. "கடந்த பத்து ஆண்டுகளில் நாங்கள் சம்பாதித்த மதிப்பையும் கௌரவத்தையும் இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் இழந்தோம். அதை மீட்க நாங்கள் போராடி வருகிறோம்," என்று ஜெர்மனியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் தெரிவித்தார்.