இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் அருகேயுள்ள பரவூர் புட்டிங்கல் தேவி கோவிலில் நேற்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் 107 பேர் மாண்டனர்; 383 பேர் காயமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப் படுகிறது. இரவு 11.30 மணிக்குத் தொடங்கிய வாணவேடிக்கை முடிய அரைமணி நேரம் இருந்த போது, அதிகாலை 3.30 மணிக்கு இந்தப் பெருவிபத்து நிகழ்ந்தது. வாணவேடிக்கையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்து கிளம்பிய தீப்பொறிகள் அருகில் இருந்த கட்டடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீது விழ, அவை வெடித்துச் சிதறின. இதனால் அந்த இடம் முழுக்கத் தீ பரவியது. வெடிபொருட்கள் இருந்த கான்கிரீட் கட்டடமும் முற்றிலும் தரைமட்டமானது.
இதையடுத்து, தீயில் கருகியும் கட்டட இடிபாடுகளில் சிக்கியும் பலர் உயிரிழந்தனர்; ஏராளமா னோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடி நேற்றுப் பிற்பகலில் நேரே சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். அவருடன் 15 பேர் கொண்ட மருத்துவக் குழு வினரும் சென்றனர். முன்னதாக, உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு இரண்டு லட்ச ரூபாயும் காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். அத்துடன், மீட்புப் பணிகளில் உதவுவதற்காக ஹெலிகாப்டர் களையும் கப்பல்களையும் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, எட்டு ஹெலி காப்டர்கள், ஒரு டோர்னியர் விமானம், மூன்று கப்பல்கள் ஆகியவை நிவாரணப் பொருட்களுடன் அங்கு விரைந்தன. சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஆறு மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.