வர்த்தகத்திற்குத் தொடர்ந்து துணை புரிந்து, தாராளமயமாக்குமாறு உலகத் தலைவர்களிடம் பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார். ஜி-20 அமைப்பின் தலைவர்களுக்கான உச்சநிலை மாநாட்டின் ஓர் அங்கத்தில் பேசிய திரு லீ, உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகத் துணையாதரவு ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்குமாறு உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார். செலவுகளைக் குறைத்து, சரக்கு விநியோகத்தைத் துரிதப்படுத்தி வர்த்தகத்திற்குத் துணை புரிவது ஒப்பந்தத்தின் நோக்கம்.
"வர்த்தகத்திற்குத் தொடர்ந்து துணைபுரிந்து, தாராளமயமாக்கும் முயற்சியைக் கட்டிக்காக்க அனைத்துலக அடிப்படையில் நாம் செயல்படவேண்டும்," என்றார் திரு லீ. இந்த அங்கத்தின்போது, அதிகரித்துவரும் வர்த்தக எதிர்ப்புகள், மெதுவடைந்துவரும் உலகளாவிய பொருளியல் ஆகியவற்றுக்கு மத்தியில் வர்த்தகத்தையும் முதலீடுகளையும் ஊக்கப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி உலகத் தலைவர்கள் கலந்து பேசினார்கள்.
தன்னைப்பேணி நடவடிக்கைகள் 2008 முதல் அதிகரித்து வருவதாக உலக வர்த்தக நிறுவனத்தின் ஜூன் மாதப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதனால், வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். பெரிய சந்தைகளுக்குக் கூடுதலாக இரண்டு நடவடிக்கைகளையும் திரு லீ பரிந்துரைத்தார்: உலக வர்த்தக நிறுவனத்தின் சுற்றுப்புறவியல் பொருட்கள் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையவேண்டும் என்பது முதல் பரிந்துரை. காற்றுச் சுழல்பொறி, தண்ணீர் சுத்திகரிப்பு வடிகட்டிகள் போன்ற "பசுமை" பொருட்களின் தீர்வையைக் குறைப்பது ஒப்பந்தத்தின் நோக்கம்.
வளர்ச்சியைப் பெருக்க தொலைத்தொடர்பு, சுற்றுப்புறவியல் சேவைகளை உலகத் தலைவர்கள் தாராளமயப்படுத்தவேண்டும் என்பது இரண்டாவது பரிந்துரை. வர்த்தகம் பற்றிய பொது கண்ணோட்டமும் மாறியிருப்பதாகத் திரு லீ குறிப்பிட்டார். வர்த்தகத்தால் தாங்கள் பயனடையவில்லை என்று கருதிய தொழிலாளர்கள் இப்போது கலக்கமடைந்து வருவதாக அவர் கூறினார்.
சீனாவின் ஹாங்ஸே„வ் நகரில் நடைபெற்றுவரும் உச்ச நிலை மாநாட்டில் கலந்துகொண்ட ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (இடமிருந்து நான்காவது), இடக்கோடியில் திருமதி லீ, நடுவில் அதிபர் ஒபாமா. படம்: ஏஎஃப்பி