புதுடெல்லியிலிருந்து தமிழவேல், துணை செய்தி ஆசிரியர்
இந்தியாவில் வர்த்தகம் புரிய இது சிறந்த தருணம் என்றும் தற்போது இங்குள்ள வர்த்தகச் சூழல் மிகவும் நம்பிக்கை அளிக்கிறது என்றும் கூறுகிறார் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபையின் தலைவர் டாக்டர் ஆர் தேவேந்திரன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இந்தியாவில் வர்த்தகம் புரிய உகந்த சூழல் நிலவுகிறது என்பது அவரது கணிப்பு. இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் லீ சியன் லூங்குடன் சென்றி ருக்கும் வர்த்தகக் குழுவில் இடம்பெற்றுள்ள டாக்டர் தேவேந்திரன், புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்த சிங்கப்பூர் வர்த்தகர்களுக்கான கூட்டத் தில் பங்கேற்றபின் தமிழ் முரசிடம் பேசினார். இக்கூட்டத்திற்கு பிரதமர் லீ சியன் லூங்கும் சிறப்பு வருகை அளித்தார். "இந்திய அரசு அதிகாரிகள் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். சொல்வதைச் செய்கிறார்கள். அதை விரைந்தும் செய்து முடிக்கிறார்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பல கதவுகள் திறந்துள்ளன. கூடிய விரைவில் இந்தியா பெரும் வளர்ச்சி அடையும் என்பது திண்ணம்," என்றார் டாக்டர் தேவேந்திரன்.
அண்மைய ஆண்டுகளில் சிங்கப்பூர்=இந்திய உறவு மிகவும் அணுக்கமடைந்துள்ளது என்றும் இந்தியாவின் வளர்ச்சியில் சிங்கப்பூரும் அதிக பயன் அடை யும் என்றும் அவர் நம்புகிறார். சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ சோக் டோங் தொடங்கி வைத்த பணியை திரு லீ சியன் லூங் மேலும் சிறப்பாகத் தொடர் கிறார் என்றும் திரு தேவேந்திரன் குறிப்பிட்டார். திரு கோ சோக் டோங் 1990களில் இந்தியாவில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதைச் சுட்டி, சிங்கப்பூர் முதலீட்டாளர் களை இந்தியாவில் கால்பதிக்க ஊக்குவித்து இரு நாட்டுக்கும் இடையே வர்த்தகப் பாலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களித்தார். "திரு லீ இரு நாடுகளையும் வர்த்தக, பொருளியல் ரீதியாக இணைக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார். அதனால் இரு நாட்டு மக்களிடையேயும் உறவு மேம்பட்டுள்ளது," என்று டாக்டர் தேவேந்திரன் சொன்னார். சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழில் சபையைப் பொறுத்தமட்டில் தற்போது இந்தியாவில் இருக்கும் வாய்ப்புகள் குறித்து தாம் மிகவும் திருப்தியாக இருப்பதாகவும் இந்தியாவில் வர்த்தகம் அல்லது முதலீடு செய்ய விரும்புவோருக்கான ஒரு தகவல் மையத்தை சபை ஏற்படுத்தி உள்ளதையும் அவர் சுட்டினார்.
மேலும் பல சிங்கப்பூர் நிறுவனங்களும் வர்த்தகங்களும் இந்தியாவில் முதலீடு செய்வதை சபை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார். சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழில் சபை உறுப்பினர்கள் 12 பேர் உட்பட சிங்கப்பூரிலிருந்து கிட்டத்தட்ட 50 வர்த்தகர்கள் புது டெல்லிக்கு வந்துள்ளனர். புது டெல்லியைத் தொடர்ந்து அவர்கள் மும்பையில் நடைபெறும் வர்த்தகர்கள் சந்திப்பிலும் பங்கேற்பார்கள். பிரதமர் திரு லீ சியன் லூங் கும் திரு மோடியும் நேற்று முன் தினம் புது டெல்லியில் சந்தித்தனர். சிங்கப்பூர்=இந்தியா வர்த்தக கூட்டுறவை மேலும் மேம்படுத்தும் வண்ணம் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவர்கள் முன்னி லையில் கையெழுத்தாயின.
பிரதமர் லீ சியன் லூங்கும் திருமதி லீயும் இந்தியாவில் வசிக்கும் சிங்கப்பூரர்களை செவ்வாய் இரவு புதுடெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் சந்தித்து உரையாடினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்