தாளிப்புப் பொருள் வியாபாரியாக இருந்து படிப்படியாக உயர்ந்த பெருவணிகர் திரு முகம்மது யூசுப் இப்ராஹிம், இலங்கையின் முன்னைய அதிபரால் கௌரவிக்கப்பட்டார். ஆனால் இப்போது அவரது நற்பெயருக்குப் பெரும் இழுக்கு ஏற்பட்டுள்ளது - அவரது சொந்த மகன்களால்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இந்திய ஊடகங்களால் அடையாளப்படுத்தப்பட்ட எட்டு பேரில் அவரது இரண்டு மகன்கள் இன்ஷஃபும் இல்ஹம்மும் இடம்பெறுகின்றனர். இதனால் திரு இப்ராஹிம் கடுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறார்.
கொழும்பு அருகே அவரது குடும்ப மாளிகையில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தியபோது பெண் சந்தேக நபர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கு முன்னால் தன்வசமுள்ள குண்டு ஒன்றை வெடிக்கச் செய்தார். வெடிப்பில் அம்மூவருடன் போலிஸ் அதிகாரிகள் பலர் இறந்தனர். அந்தப் பெண், திரு இப்ராஹிம்மின் மனைவியாக இருக்கலாம் என்று இந்தியாவைச் சேர்ந்த பெயர் வெளியிடப்படாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணைக்குப் பங்கம் ஏற்படுத்தாமல் இருக்க சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட இலங்கை அரசு மறுத்துள்ளது. ஆயினும், அவர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள் என்றும் நடுத்தர அல்லது மேல் வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இலங்கையின் தற்காப்புத் துணையமைச்சர் திரு ருவன் விஜயவர்த்தனே தெரிவித்திருக்கிறார்.