வேலையிலிருந்து ஓய்வு பெறுவது, ஓய்வுக்குப் பிறகு மறுவேலையில் சேர்வது ஆகியவற்றுக்கான வயது வரம்பு உயர்த்தப்படுவது உள்ளிட்ட சில நீண்டகால முடிவுகள் இவ்வாண்டின் பிற்பகுதியில் அறிவிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்திருக்கிறார். தற்போது நிலவும் அக்கறைகள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் நீண்ட கால நடவடிக்கைகளுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் தமது மே தினச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
நல்ல வேலைகள், கூடுதல் சம்பளம் ஆகியவற்றை ஊழியர்கள் அடைவதற்கு அரசாங்கம் தொழில்நுட்ப ரீதியாகக் கைகொடுக்கும் என்று திருமதி டியோ தெரிவித்தார்.
நீண்ட கால நடவடிக்கைகளில் ஒன்றாக ஓய்வுபெறும் வயது 62 வயதுக்கு மேலாகவும் மறுவேலையில் சேர்வோருக்கான வயது வரம்பு 67 வயதுக்கு மேலும் உயர்த்தப்படும். முதிய ஊழியர்களுக்கான முத்தரப்புச் சங்கத்திலுள்ள அரசாங்கம், வேலையிடங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இது குறித்து கடந்த மாதம் இணக்கம் கண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் திருமதி டியோ கடந்த மாதம் அறிவித்தார்.
"திறன் மேம்பாடு, வயதான ஊழியர்களுக்காக வேலைகளை மறுவடிவமைப்பது ஆகியவற்றுக்கு முதலீடு செய்ய ஊழியர்களும் முதலாளிகளும் இந்த முடிவால் ஊக்கமடைவர் என்று நான் நம்புகிறேன்," என்றார் திருமதி டியோ .
55 வயதுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான மத்திய சேமநிதித் திட்டத்தின் சந்தா விகிதங்களைப் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
திருமதி டியோவின் மே தினச் செய்தியைப் பற்றிய விரிவான விவரங்களுக்கு நாளைய தமிழ் முரசைப் படிக்கவும்...