சிறிய அளவிலும் பெரிய அளவிலும் எவரும் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வழிகளில் உலகெங்கும் தாக்குதல்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆக அண்மையில் துப்பாக்கியால் சுடப்பட்டு, கத்தியால் பலமுறை குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழிந்தார் பிரிட்டனின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஜோ காக்ஸ். இரு பிள்ளைகளுக்குத் தாயான 41 வயது ஜோ காக்ஸின் உயிரைப் பறித்தது ஒரு தனிமனிதனின் வெறித்தனம். அரசியல்வாதிகள் தாக்கப்படுவதை அதிகம் அறிந்திராத பிரிட்டன், வெறுப்பு வெறியாகும் விஸ்வரூபத்தை பெரிதாகக் கண்டிராத அந்நாடு இப்போது ஆடிப் போயி ருக்கிறது.
ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்காவை அரண்டு போக வைத்தது ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூடு சம்பவம். அமெரிக்காவில் நடந்துள்ள ஆகப்பெரிய வன்முறை சம்பவத்தில் 49 பேரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளான். அவனையும் போலிசார் கொன்று விட்ட தால் அவனது உண்மையான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை. ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதான வெறுப்பு, ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் பின்னணி போன்றவை இந்தத் தாக்குதலுக்குக் காரணங்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சென்ற வாரம் மற்றொரு சம்பவத்தில் பிரான்சில் ஐஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளன் நடத்திய தாக்குதலில் 42 வயது போலிஸ் அதிகாரியும் அவரது மனைவி யும் உயிரிழந்தனர். பிரான்சில் தீவிரவாத தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடிந்த வரை அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தலைவிரித்தாடும் பயங்கரவாதப் போக்கும் வன்முறைச் சிந்தனைகளும் உலகின் அமைதியையும் நிம்மதியையும் குலைத்துவிட்டன.
மக்களின் எதிர்காலத்தில், நாட்டின் நிர்மாணத்தில், மேம்பாட்டில் அக்கறையையும் முதலீட்டையும் செலுத்த வேண்டிய நாடுகள் தற்காப்பிலும் பாதுகாப்பிலும் நிதியையும் திறன்களையும் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகப் பருவநிலை மாறிவிட்டது என்பது ஏற்றுகொண்டே ஆகவேண்டிய யதார்த்தமாக இருப்பதுபோல, அவ்வப்போது தாக்குதல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதும் மிகக் கசப்பான உண்மை. இதற்கு சிங்கப்பூர் உட்பட எந்த நாடும் விதிவிலக் கல்ல. ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துப் பேசிய உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சிங்கப்பூரும் சுய தீவிரவாத போக்குக் கொண்டவர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க மிரட்டலை எதிர்நோக்குகிறது என்று எச்சரித்துள்ளார்.
'எஸ்ஜி' பாதுகாப்பு திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, பயங்கரவாத மிரட்டலுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். இது அரசாங்கம் மட்டுமே செய்துவிடக்கூடிய காரியமல்ல. ஒட்டுமொத்த மக்களும் ஒவ்வொருவரும் ஆயத்தமாக இருப்பது முக்கியம் என்று அவர் கூறியிருப்பதை ஒவ் வொருவரும் மனதில்கொள்ள வேண்டும். சிறிதும் தொய்வில்லாத கண்காணிப்புடன் அசம்பாவிதங்கள் நிகழும் போது அவற்றை எதிர்கொள்ளும் தயார் நிலையில் இருப்பதும் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.
அதேநேரத்தில் உலகெங்கும் அதிகரித்து வரும் தாக்குதல்களால் உலக மக்களும் சிங்கப்பூரர்களும் எதிர்கொள்ளும் மற்றொரு ஆபத்து, குறிப்பிட்ட சமயம், இனம், பிரிவினர் மீதான வெறுப்பு வளர்வது. அதனால் அந்த சமயம், இனத்தைச் சார்ந்தவர்கள் ஒதுக்கப்படுவதும் அவர்கள் மீது நம்பிக்கையிழப்பதும் பிரச்சினையை மேலும் வளர்க்கவே செய்யும். தூற்றுதலும் வெறுப்பும் அதை மேலும் ஊதிப் பெருக்கும். எந்தவொரு சமூகத் தையும் ஒதுக்குவது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அது நியாய உணர்வைப் பெரிதும் பாதிக்கும்.
ஆபத்தான உலகில், ஆபத்தான தருணத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதை தொடரும் தாக்குதல் சம்பவங் கள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெறுப்பு எனும் விஷக் கிருமி உயிர்பெறாமல் முளைக்கும்போதே அதை ஒழித்து, சமுதாய ஒருங்கிணைப்பைக் கட்டிக்காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அரசாங்கங்களின் பொறுப்பு மட்டுமல்ல- மக்கள் ஒவ்வொ ருவரின் தார்மீகக் கடமையும்கூட. ஆயுதங்களை ஒடுக் கும் பேராயுதம் மக்களின் ஒற்றுமையே.