விக்ரம் கன்னா, இணை ஆசிரியர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்த துணை வரவுசெலவுத் திட்டம் தனிச்சிறப்புமிக்கது மட்டுமல்ல, அதற்கும் மேலானது. இருந்தாலும் அந்தத் திட்டத்தின் வெற்றி, சம்பந்தப்பட்ட அனைவரும் தாங்களாகவே முன்வந்து அளிக்கும் ஒத்துழைப்பையும் ஒற்றுமையையும் பொறுத்தே இருக்கிறது.
அந்தத் துணை வரவுசெலவுத் திட்டம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது பற்றி பல்வேறு பகுப்பாய்வாளர்களும் தொழில்துறைத் தலைவர்களும் அனுமானித்து வந்த நிலையில், அளவுக்கு அதிக எதிர்பார்ப்புகளோ தொகை அளவில் ஒருமித்த கவனம் செலுத்துவதோ முக்கியமல்ல என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் வியாழக்கிழமை ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இருந்தாலும் அமைச்சர் வரலாறு படைத்து இருக்கிறார். அந்த துணை வரவுசெலவுத் திட்டத்தை ‘மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டம்’ என்று திரு ஹெங் வர்ணித்து இருக்கிறார்.
அந்தத் திட்டம் அதிகபட்சமாக $30 பில்லியன் வரைதான் இருக்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் துணைப் பிரதமரின் திட்டம் அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் கடந்து $48 பில்லியன் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.
பொருளியலை நிலைப்படுத்த ஒதுக்கப்பட்டு உள்ள மொத்த தொகை இப்போது $55 பில்லியன். சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு இதுதான் சிங்கப்பூரின் ஆகப் பெரிய வரவுசெலவுத் திட்டம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 11 விழுக்காடு. இந்த அளவு, அமெரிக்காவின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள S$3.1 டிரில்லியன் திட்டத்தைவிட பெரியது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.9 விழுக்காடு ஒட்டுமொத்த பற்றாக்குறை ஏற்படும் என்பதும் புதிய ஒரு நிலவரம்தான்.
இருந்தாலும், இந்தப் பற்றாக்குறை பற்றி கவலைப்பட இது நேரம் அல்ல. நெருக்கடியில் இருந்து மீண்டு வருவது பற்றிதான் இப்போது யோசிக்க வேண்டும்.
கொரோனா கிருமித்தொற்று கொடூரம், 1998ல் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடி, 2008ல் ஏற்பட்ட உலக நிதித்துறை நெருக்கடியை எல்லாம் மிஞ்சிவிட்டது.
உற்பத்தியும் தேவைகளும் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் மனநிலை அதிர்ச்சியும் ஏற்பட்டு இருக்கிறது. பொருளியல் மந்தம் நிச்சயமாகிவிட்டது. எந்த அளவுக்கு அது இருக்கும் என்பதுதான் கேள்விக்குறி. சிங்கப்பூர் பொருளியல் இந்த ஆண்டு 4 விழுக்காடு வரை சுருங்கிவிடும் ஆபத்தும் இருப்பதாக முன்னுரைக்கப்படுகிறது.
கொரோனா கிருமித்தொற்று இன்னமும் உலகை ஆட்டுவிக்கிறது. அது எப்படி பரிணமிக்கும், எந்த அளவுக்குப் பொருளியல் சேதாரத்தை ஏற்படுத்தும் என்பது எல்லாம் நிச்சயமாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்; ஊழியர்களுக்கு வேலை போகாமல் இருக்க வேண்டும்; வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்க வேண்டும்; குடும்பங்களுக்குப் போதிய ஆதாரம் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் உறுதிப்படுத்துவதுதான் மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கம்.
வரவுசெலவுத் திட்டம் இவற்றில் எல்லாம் கவனம் செலுத்துகிறது. குடும்பங்களுக்கும் நிறுவனங்களுக்கும் சுயதொழில் புரிவோருக்கும் குறைந்த வருமானக்காரர்களுக்கும் வேலை இல்லாதோருக்கும் வேலை தேடுவோருக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி பெறுவோருக்கும் அந்தத் திட்டம் ஆதரவு அளிக்கிறது.
‘வேலை ஆதரவுத் திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை, 2020 வரவுசெலவுத் திட்டத்தில் ஐந்து வாரங்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 8 விழுக்காடு மானியம் அளிக்க அந்தத் திட்டம் வகை செய்தது. இப்போது புதிய துணை வரவுசெலவுத் திட்டம் மூலம் அந்த மானிய அளவு சம்பளத்தில் குறைந்தபட்சம் 25 விழுக்காடு அளவுக்கு உயர்கிறது.
உணவு, சேவைத் துறையில் 50 விழுக்காடு, விமான மற்றும் பயணத்துறைகளுக்கு 75 விழுக்காடு என அந்த மானியம் கிடைக்கும்.
மொத்தம் $15.1 பில்லியன் அளவுக்குக் கொடுக்கப்படும் அந்த மானியங்கள், நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படவும் ஊழியர்கள் தொடர்ந்து வேலை பார்க்கவும் வழிவகுக்கும்.
என்றாலும் நிறுவனங்கள் இதில் ஒத்துழைக்க வேண்டும் என்று திரு ஹெங் வலியுறுத்தி இருக்கிறார். இருந்தாலும் இதில் நிபந்தனை எதுவும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படவில்லை.
மானியத்தை வாங்கிக்கொண்டு ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு மானியங்கள் குறைக்கப்பட வேண்டும், அல்லது நிறுத்தப்பட வேண்டும்.
இந்த மானியங்களை வேறு காரியங்களுக்கு நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்படவும் வேண்டும்.
இதில் அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் விழிப்புடன் இருந்து இத்தகைய தவறான காரியங்களைத் தடுக்கும் என்று நம்புகிறோம்.
பொருளியல் நிலவரங்களுக்கு ஏற்ப சில துறைகள் இப்போது எதிர்பார்ப்பதைவிட இன்னும் மோசமான நிலவரங்களையும் எதிர்பார்க்கக்கூடும்.
பொருளியல் மந்த நேரத்தில் யாருக்கு லாபம், யாருக்கு நட்டம் என்பதை கணிப்பது எளிதானது அல்ல. ஆகையால் பொருளியலில் என்ன நிகழ்கிறது என்பதற்கு ஏற்ப மானிய அளவானது மாற்றத்திற்கு உட்பட வேண்டும்.
வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்று இருக்கும் இதர சில நடவடிக்கைகள் எந்த அளவுக்குப் பலன் தரும் என்பது நிறுவனங்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதைப் பொறுத்ததாக இருக்கும். எடுத்துக்காட்டாக, அலுவலகம் அல்லது தொழில்துறை இடத்தின் உரிமையாளர் 30 விழுக்காட்டு வரித்தள்ளுபடியைப் பெறுவார்.
ஆனால் அந்தக் கட்டடங்களில் வாடகைக்கு இருப்போர் பயன்பெறுவர் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
வாடகைக் கட்டணம் தொடர்பான நிபந்தனை ஏதேனும் இடம்பெற்றால் இந்தப் பிரச்சினைக்கு தற்காலிகமாகத் தீர்வு காணலாம். அதே நேரத்தில் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கும் பல பொறுப்புகள் இருக்கின்றன.
அவர்களுக்கும் கடன், அடமானப் பொறுப்புகள் இருக்கலாம். ஆகையால் வங்கிகள் கொஞ்சம் நீக்குப்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கும் கடன்களைப் பொறுத்தவரையில் அரசாங்கம் 80 விழுக்காட்டு அளவுக்கு உத்திரவாதம் வழங்கி இருக்கிறது.
இருந்தாலும் வட்டி விகிதங்களைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தைப் போலவே வங்கிகள் நீக்குப்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும்.
நிதி அமைச்சரின் மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டம் பிரம்மாண்டமானது, பரவலானது. என்றாலும் கூட அதை இன்னமும் சரிப்படுத்த வேண்டிய தேவையை கொரோனா கிருமி நிலவரம் ஏற்படுத்தக்கூடும். இதை மிகக் கவனமாக கவனித்து வரவேண்டிய அவசியம் இருக்கும்.
அதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள திட்டத்தின் வெற்றி என்பது, நிறுவனங்கள், ஊழியர்கள், வங்கிகள், சுயதொழில் புரிவோர், சுகாதாரச் சேவை அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடையில் நிலவும் ஒற்றுமையையும் அவை தாங்களாகவே முன்வந்து அளிக்கும் ஒத்துழைப்பையுமே பெரிதும் சார்ந்து இருக்கும்.
கொரோனா கிருமித்தொற்று நெருக்கடியிலிருந்து மீண்டு வருவது என்பது அரசாங்கத்திற்கு மட்டும் உரிய பொறுப்பு அல்ல. அது சமூக பொது முயற்சி.
இதை சிங்கப்பூரர்கள் சாதிக்க முடியும். அப்படிச் சாதித்து முடித்த பிறகு அவர்கள் தங்களுடைய கடந்த காலத்தைத் திரும்பி பார்த்து இதுதான் மீட்சித்திறன் என்று கூற முடியும்.