நடந்து முடிந்த தேர்தல் மூலம், இளம் வாக்காளர்கள் மக்கள் செயல் கட்சிக்கு ஒரு செய்தியை தெரிவித்து இருக்கிறார்கள். பெண் வேட்பாளர்கள் தேர்தலில் நல்ல முறையில் சாதித்து இருக்கிறார்கள்.
2020 பொதுத் தேர்தல், மக்கள் செயல் கட்சிக்கு ஒரு தோல்வி என்று சில வெளிநாட்டு கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அவர்கள் கூறுவது தவறு.
மக்கள் செயல் கட்சி ஜூலை 10ஆம் தேதி நடந்த தேர்தலில் 93 இடங்களில் 83 இடங்களைக் கைப்பற்றியது. 61.2 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.
எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இத்தகைய வெற்றி என்பது தனிச்சிறப்புமிக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.
சிங்கப்பூர் ஒரு ஜனநாயக நாடு. வேறு வகை அரசாங்கம் இங்கு இல்லை என்பதை நமக்கு நாமே நினைவூட்டி கொள்ள வேண்டியது முக்கியமானது.
புறக் கண்ணோட்டம்
இந்தத் தேர்தல் முடிவுகள் மசெகவுக்குப் பேரிடர் என்று ஆஸ்திரேலியாவின் ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கல் பார் வர்ணித்தார்.
மலேசியா நாட்டிங்ஹம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரிஜட் வெல்சும் தைவான் தேசிய பல்கலைக்கழகமும் தேர்தல் முடிவுகளை மசெகவுக்கு சங்கடமான ஒரு தோல்வி என்று வர்ணித்துள்ளன.
இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.
இவை எல்லாம் நியாயமான மதிப்பீடுகள்தானா?
ஆஸ்திரேலியா, பிரிட்டன், இந்தியா நாடுகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் செயல்திறனையும் மசெகவின் தேர்தல் செயல்திறனையும் ஒப்பிட்டு பார்ப்போம்.
ஆஸ்திரேலியாவில் 2019ல் நடந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் கூட்டணி 151 இடங்களில் 77ல் வெற்றி பெற்றது. அது பெற்ற வாக்குகள் 41%.
பிரிட்டனில் 2019ல் கன்சர்வேட்டிவ் கட்சி 650 தொகுதிகளில் 365ல் வென்றது. 43.6 விழுக்காட்டு வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது.
இந்தியாவில் 2019ல் பாஜக 542 இடங்களில் 303ஐ கைப்பற்றியது. அந்தக் கட்சி பெற்ற வாக்குகள் 37 விழுக்காடு.
மசெகவுக்கும் பாட்டாளிக் கட்சிக்கும் வெற்றி
இந்த நாடுகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் செயல்திறனை மசெகவின் தேர்தல் செயல்திறனுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், மசெக பெற்றுள்ள வெற்றி தனிச்சிறப்புமிக்கது என்பதை நியாயமான யாரும் ஒப்புக்கொள்வார்கள்.
தேர்தல் முடிவுகள் மசெகவுக்கு பேரிடரோ, சங்கடமான ஒரு தோல்வியோ அல்ல என்பது நிச்சயம்.
அதேவேளையில், பாட்டாளிக் கட்சிக்கு இந்தத் தேர்தல் ஒரு வெற்றி. அந்தக் கட்சி அல்ஜுனிட் குழுத்தொகுதி, ஹவ்காங் தனித்ெதாகுதி ஆகிய தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெறுமா என்று தேர்தலுக்கு முன் சந்தேகம் நிலவியது.
ஆனால் அந்த இரண்டு தொகுதிகளையும் தக்கவைத்துக் கொண்டதோடு செங்காங் குழுத்தொகுதியிலும் அந்தக் கட்சி வெற்றி பெற்றது.
எதிர்த்தரப்பு தலைவர்
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது என்று பிரதமர் லீ சியன் லூங் செய்துள்ள முடிவை நான் பாராட்டுகிறேன்.
எதிர்த்தரப்பு தலைவர் என்ற முறையில் திரு பிரித்தம் சிங் தன் கடமைகளை நிறைவேற்ற ஏதுவாக ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள், தேவையான வசதி களும் செய்துத்தரப்படும்.
திரு சிங்கை நாடாளுமன்ற எதிர்த்தரப்பு தலைவராக நியமித்து இருப்பதன் மூலம் பாட்டாளிக் கட்சி இங்கு நிலைத்திருக்கும். வரும் ஆண்டுகளில் அது இன்னும் வலுவாக வளரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை திரு லீ ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
சிங்கப்பூர் இரண்டு கட்சி நாடாகப் பரிணமிப்பதை நாம் காணக்கூடிய சூழல் உருவாகக்கூடும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கருத்தாசிரியர் சுவா முவி ஹூங் தெரிவித்து இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
அதோடு, இந்தத் தேர்தலில் உண்மையிலேயே யார் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று கேட்டால், சிங்கப்பூர்தான் வெற்றி பெற்று இருக்கிறது என்று கூறுவதே அதற்கான சரியான விடையாக இருக்கும் என சிங்கப்பூர் அனைத்துலக விவகாரக் கழகத்தின் தலைவர் சைமன் டே தெரிவித்து இருப்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
2020 பொதுத் தேர்தலில் வென்றது யார்? சிங்கப்பூர்தான் வென்றது.
தேர்தல் நடந்த நேரம்
இரண்டு நெருக்கடிகளில் சிங்கப்பூர் சிக்கிக்கொண்டு இருக்கிறது. ஒன்று சுகாதார நெருக்கடி. மற்றொன்று பொருளியல் நெருக்கடி. இப்படிப்பட்ட சூழலில் தேர்தல் நடந்தால் அது ஆட்சியில் இருப்பவர்களுக்கே சாதகமாக இருக்கும் என்று வழிவழியாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் இந்த நெருக்கடி மூலம் மசெகவுக்கு நன்மை ஏற்படாதது ஏன்?
கொவிட்-19 சூழலில் தேர்தலை நடத்துவது சந்தர்ப்பவாதம் என்று வாக்காளர்கள் பலரும் கருதியதே இதற்கான காரணம் என்று நான் நினைக்கிறேன்.
கொவிட்-19 சூழலில் தேர்தலை நடத்தினால் 2வது முறையாக கிருமிப் பரவல் தலையெடுத்துவிடும் என்று பல மருத்துவர்கள் அச்சம் தெரிவித்திருந்தார்கள்.
தார்மீக வழியில் நடப்போம்
அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர்கள் பல செய்திகளைத் தெரிவித்து இருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். தார்மீக வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். மாற்று வழியைத் தேடாதீர்கள் என்று வாக்காளர்கள் அரசியல் கட்சிகளை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
எதிர்த்தரப்பினரை நசுக்குவதைக் கைவிட்டுவிட்டு பிரச்சினைகளில் ஒருமித்த கவனம் செலுத்த வேண்டும் என்பது வாக்காளர்கள் தெரியப்படுத்தும் இரண்டாவது செய்தி.
இணையத் தேர்தல்
நடந்து முடிந்த தேர்தல்தான் சிங்கப்பூரின் முதலாவது இணையத் தேர்தல். கொவிட்-19 காரணமாக பொதுக் கூட்டங்களை நடத்த முடியவில்லை.
வீட்டுக்கு வீடு வருகைகள், அங்காடி நிலையங்களில் வாக்காளர்களைச் சந்திப்பது, இணையம் மூலம் பிரசாரம், மெய்நிகர் உரையாடல்கள், ஆகியவற்றில் கட்சிகள் கவனம் செலுத்தின.
இணையத்தைப் பயன்படுத்தி எல்லா கட்சிகளுமே சிறப்பாகச் செயல்பட்டன என்பதே என் கருத்து.
இதைப் பொறுத்தவரையில், குறிப்பாக மசெகவும் பாட்டாளிக் கட்சியும் ஆற்றலுடன் செயல்பட்டன.
மகளிர் சக்தி
2020 பொதுத் தேர்தலில் அருமையான ஓர் அம்சம் என்னவென்றால் அதிக எண்ணிக்கையிலான பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றதுதான். மொத்தத்தில் 39 பேர் பெண் வேட்பாளர்கள்.
தனித்தொகுதிகளில் களம் இறங்கிய மசெக பெண் வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல மாதர்கள் அரசியலிலும் நாடாளுமன்றத்திலும் நுழைவதைக் காண எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு நாள் வரும். அப்போது சிங்கப்பூருக்கு ஒரு பெண் பிரதமராக இருப்பார் என்பதே எனது கனவு.
செங்காங் குழுத்தொகுதி
செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி வென்றது பெரும் வியப்பு. இதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை.
செங்காங் குழுத்தொகுதி புதிய ஒரு தொகுதியாக உருவாக்கப்பட்டது. பெரும்பாலான வாக்காளர்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கிறார்கள்.
இளம் வாக்காளர்கள், இளம் குடும்பங்கள் அதிகமாக இருக்கும் பகுதி அது.
முதிய வாக்காளர்களைவிட இளம் வாக்காளர்கள் வேறுபட்ட உலக கண்ணோட்டத்தை, விருப்பங்களைக் கொண்டிருக்கிறார்களா?
இதற்கு ஆமாம் என்பதே எனது பதில்.
அரசாங்கம் அதிகம் கலந்து ஆலோசிக்கும் போக்குடன் இருக்கவேண்டும் என்றும் சட்டாம்பிள்ளைத் தனத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இளம் வாக்காளர்கள் விரும்புகிறார்கள்.
சிங்கப்பூர், சீனர் அல்லாத ஒருவரைப் பிரதமராக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று கூறப்படுவதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
ஏழ்மை, ஏற்றத்தாழ்வு அகல வேண்டும் என்றும் சிங்கப்பூர் இன்னும் நியாயமிக்கதாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
சிங்கப்பூர் இன்னும் பசுமையாக வேண்டும் என்பதும் அவர்களின் விருப்ப மாக உள்ளது.
வாக்களிப்பு மூலம் அவர்கள் மசெக அரசாங்கத்திற்குப் பல தகவல்களைத் தெரிவித்து இருக்கிறார்கள். அவற்றுக்கு மசெக செவிசாய்க்கும் என்பதே எனது மனப்பூர்வமான நம்பிக்கை.
அவற்றை ஒதுக்கிவிடாமல் திறந்த மனதுடன் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று நான் நம்புகிறேன்.
இரண்டு அம்சங்களை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
2020 பொதுத் தேர்தல் மசெகவுக்கு கிடைத்த வெற்றிதான். அது, அந்தக் கட்சிக்குப் பேரிடரோ, சங்கடமான தோல்வியோ அல்ல.
பாட்டாளிக் கட்சி செங்காங் குழுத்தொகுதியிலும் வென்று இப்போது அது நம்பத்தகுந்த எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது என்பது மற்றோர் அம்சம்.
இந்தக் கட்சி எப்போதுமே சிங்கப்பூருக்கு விசுவாசமாக இருந்து வரும் என்றும் தனக்கு ஏற்பில்லாத விவகாரங்களில் அது அரசாங்கத்தை எதிர்க்கும் என்றும் சிங்கப்பூரர்கள் எதிர்பார்ப்பார்கள்.