உயர்கல்வி நிலையங்கள், தொடர் கல்வி வழங்குநர்களுடன் இணைந்து செயல்பட தொழில்துறைத் தலைவர்களுக்கு கல்வி அமைச்சர் சான் சுன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
அவற்றின் பாடத்திட்டங்களை வடிவமைக்கவும் பகுதிநேர ஆசிரியராக செயல்பட உதவுமாறும் அவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
வணிகங்கள் அடுத்த தலைமுறை திறனாளர்களிடம் செல்வாக்குச் செலுத்த இது உதவும். மேலும் பயிற்சி அளிக்கும்போது மாணவர்கள், அந்த நிறுவனங்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்றார் அவர்.
தொழில்துறைக்கும் கல்வியாளர்களுக்கும் இடையே ‘அணுக்கமான தொடர்பு’ வேண்டும், அவர்கள் ‘நாளைய பணியாளர்களை முன்கூட்டியே உருவாக்க’ இணைந்து பணியாற்றலாம் என்று திரு சான், மே 6ஆம் தேதி கூறினார்.
சிங்கப்பூரில் பட்டம் பெறும் மாணவர்கள் தொழில்துறைக்கு பொருத்தமான திறன்களைக் கொண்டிருப்பதில்லை என்ற நிறுவனங்களின் கவலையைக் களைய இது உதவும் என்றும் அவர் கூறினார்.
இதனடிப்படையில் தொழில்துறையுடன் மேலும் அணுக்கமாகச் செயல்படுவதற்கான முயற்சிகளை இங்குள்ள சில கல்வி நிறுவனங்கள் ஏற்கெனவே மேற்கொண்டுள்ளன.
“நாளைய செயற்கை நுண்ணறிவுத் தலைவர்களை வளர்ப்பது” என்ற தலைப்பில் 37வது தலைமைத் தகவல் அதிகாரிகள் பயிலரங்கை ஒட்டி இடம்பெற்ற கலந்துரையாடலில் திரு சான் பேசினார்.
ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (ஜென் ஏஐ) ஊழியர்களை மறுவடிவமைப்பதில் பங்காற்ற முடியும் என்று திரு சான் கூறினார்.
பள்ளி அமைப்பில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் கற்பித்தல் நுட்பங்கள் பெரியவர்களுக்கான கற்பித்தலில் இருந்து வேறுபட்டவை. அவர்கள் வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தொழில்களில் பணிபுரிகிறார்கள் என்று அரசாங்க சேவைகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு சான் குறிப்பிட்டார்.
இத்தகைய மாறுபட்ட பின்னணிகளைக் கொண்ட வயது வந்தோருக்குத் தனிப்பயிற்சி வழங்க ஜென் ஏஐ பயன்படுத்தப்படலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.
ஒரு சார்புத்தன்மை, தவறான பயன்பாடு போன்ற ஏஐ பற்றி கவலைகள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அந்த தொழில்நுட்பத்தைக் கண்டு சிங்கப்பூர் பயப்பட எதுவும் இல்லை என்றும் அதைக் கைக்கொள்ளவே சிங்கப்பூர் முனைகிறது என்றும் திரு சான் சுட்டினார்.
உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைகள், ஆலோசனை நிறுவனமான அக்செஞ்சர், தகவல் தொழில்நுட்பம் மேலாண்மை சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிலரங்கு ஒரு வருடாந்திர நிகழ்வாகும். இதில் தலைமைத் தகவல் அதிகாரிகள், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதுடன், தகவல் தொழில்நுட்ப மேலாண்மை சிக்கல்களைப் பற்றியும் விவாதிப்பார்கள்.
டபிள்யூ சிங்கப்பூர் செந்தோசா கோவ் ஹோட்டலில் மே 6ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 280க்கும் மேற்பட்ட தலைமைத் தகவல் அதிகாரிகளும் தகவல் தொழில்நுட்பத் தலைவர்களும் பங்கேற்றனர்.
2024 நிகழ்வில், நகரங்கள் எவ்வாறு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன என்பதை அறிய சீனாவின் ஷாங்காய், ஹாங்ஜோ நகர்களுக்கான நான்கு நாள் ஆய்வுப்பயணமும் அடங்கும்.