பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஆக்ககரமான எந்தச் சமூகமும் விரும்புவதில்லை. என்றாலும் மானிட இனத்திற்குப் பெரும் கேடாக இருந்து வரும் பயங்கரவாதத்தை உலகில் முற்றாக துடைத்தொழிக்க இன்னமும் இயலவில்லை.
பயங்கரவாத, தீவிரவாத நோக்கத்தைக் கொண்டவர்கள், அத்தகைய சித்தாந்தங்களைக் கடைப்பிடிப்பவர்கள், காலம் மாறமாற தாங்களும் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டு புதிய புதிய பாணிகளில் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்ற முயன்று வருகிறார்கள்.
அதுவும் உலகில் இணையச் சமூக ஊடகங்கள் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்ததால் அத்தகைய பேர்வழிகளுக்கு மிகவும் கொண்டாட்டமாகி விட்டது. கவர்ச்சிகரமான ஈர்ப்பு சக்தியாக செயல்படும் இணையத்தை வெகு லாவகமாக அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இந்த முயற்சியில் அவர்கள் சமயத்தையும் விட்டுவைப்பது கிடையாது. உலகில் எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும் ரகசியமாகவும் பெரிய அளவிலும் கட்டமைப்புகளை வெகு விரையில் ஏற்படுத்திக்கொள்ளும் இணையச் சூழல் அவர்களுக்குப் பெரும் அனுகூலமாக இருக்கிறது.
முக்கியமாக இளையர்களை அவர்கள் குறி வைக்கிறார்கள். கள்ளம் கபடமின்றி, உள்நோக்கம் எதுவுமின்றி வளர்ந்து வரக்கூடிய இளையர்கள் அத்தகையோரின் வலைகளில் எளிதில் சிக்கி விடுகிறார்கள். கெட்ட நோக்கத்துடன் அழிவு சக்தியாகச் செயல்படும் பயங்கரவாதப் பேர்வழிகள், இளையரின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு, வசியம் செய்வதுபோல் தந்திரமாக அவர்களைத் தங்கள் வலைக்குள் மிக எளிதில் கொண்டுவந்து விடுகிறார்கள்.
இளையரும் அவர்கள் போதிப்பதை நம்பிவிடுகிறார்கள். தங்களுக்கு உள்ளேயே தீவிரவாத மனப்போக்கை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொள்கிறார்கள். அனைத்துலக சமூக ஊடகங்களில் கிடைக்கக்கூடிய இதர வகை தகவல்கள் எல்லாம் அத்தகைய இளையரின் சுய தீவிரவாத மனப்போக்குக்கு உரமாக அமைந்துவிடுகின்றன.
கடைசியில், அத்தகைய இளையர்கள் தவறான வழியில் விழுந்து, சமயம் போன்றவற்றைத் தவறாகப் புரிந்துகொண்டு வன்செயல் என்பது சரியான ஒன்றுதான் என்ற ஒரு மனப்போக்கை படிப்படியாக பலப்படுத்திக்கொள்கிறார்கள்.
பயங்கரவாத, தீவிரவாத வஞ்சகர்கள் வலைகளில் வசமாக சிக்கி தாங்கள் சீரழிவதோடு, சமூகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்குப் போய்விடுவது இளையர்கள் மட்டு மல்ல. ஆனாலும் பயங்கரவாதப் பிடியில் இளையர் சிக்கிவிடுவது சமூகத்திற்குக் கூடுதல் கவலையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இத்தகைய மிரட்டலை சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் பல நாடுகளும் சந்தித்து வருகின்றன.
சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் கையாண்ட 21க்கும் குறைந்த வயதுள்ள இளையர்கள் ஒன்பது பேர். அவர்களில் ஆறு பேர் அந்தச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். மூவருக்குக் கட்டுப் பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஈராக், சிரியாவைத் தளமாகக்கொண்டு செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக சிங்கப்பூரிலும் வெளியிலும் ஆயுத வன்செயல்களில் ஈடுபடத் திட்டம் போட்டிருந்த 18 வயது பதின்ம வயதுப் பையன் தடுத்துவைக்கப்பட்டு இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதை அடுத்து இந்த நிலவரங்கள் தெரியவந்தன.
பயங்கரவாதத்தைக் கையாள மிகக் கடுமை யான சட்டதிட்டங்கள் தேவை. அத்தகைய சட்டங்கள் சிங்கப்பூரில் நடப்பில் உள்ளன. பாதுகாப்பு அமைப்புகள் 24 மணி நேரமும் முழு விழிப்புடன் இருந்து அயராது பாடுபட்டு வருகின்றன.
சமய போதனைகளைத் திருத்திச் சொல்லிக் கொடுத்து வன்செயல்களை நியாயப்படுத்தும் சமூக விரோதிகளை அவை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றன.
தீவிரவாத மனப்போக்கு கொண்டவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள். எதிர்காலத்தில் அவர்கள் வன்செயல் பக்கம் போவதைத் தடுப்பதோடு, மனரீதியில் அவர்களை நல்வழிப்படுத்தி அவர்கள் நல்வாழ்க்கை வாழ்வதற்கு தடுப்புக்காவல் ஏற்பாடு உதவுகிறது.
பயங்கரவாதம் என்பது ஓர் அழிவு சக்தி. அது எந்த ஒரு சமயத்தையும் சார்ந்தது அல்ல. தீவிரவாத சித்தாந்த வலையில் யாரும் சிக்கிக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை சிங்கப்பூர் கொண்டு உள்ளது. இந்த அணுகுமுறை சிங்கப்பூருக்கு மிகச் சிறந்த வெற்றியைக் கொடுத்து வருகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான அரசாங்கத்தின் இந்த அணுகுமுறைக்குப் பேராதரவு இருப்பதால் மொத்தத்தில் தேசிய மீன்திறன் பலமடைகிறது.
இஸ்லாம் என்ற பெயரில் வன்செயல்களை அரங்கேற்ற இடமே கிடையாது என்று சிங்கப்பூரின் ஆக உயரிய இஸ்லாமிய சமயத் தலைவரான முஃப்தி அண்மையில் அறிவித்தார். இது சிங்கப்பூரின் அதிகாரபூர்வ அணுகுமுறையை மேலும் பலப்படுத்துவதாக இருக்கிறது.
நாட்டில் எந்த அளவுக்குக் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் ஒருவர் ரகசியமாக தீவிரவாத சித்தாந்தங்களுக்குச் செவிசாய்த்து, சுய தீவிரவாத மனப்போக்கை வளர்த்துகொள்ளும் வரை அந்தச் சட்டங்களால் எதையும் செய்ய இயலவில்லை என்பது தெளிவு.
அதாவது, ஒருவர் அத்தகைய மனநிலைக்கு வந்த பிறகே தடுப்புக்காவல் அமலாகிறது, அமலாக முடியும். ஆகையால் தீவிரவாத மனப்போக்கு உருவாவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வகை செய்யும் ஒரு சூழ்நிலையை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதே நம் இலக்காக இருக்க வேண்டும். இதைச் சாதிக்க சிங்கப்பூர் சமூகம் ஒன்றாகச் சேர்ந்து செயல்படவேண்டும்.
அனைத்துலக சமூக ஊடகங்களில் இடம்பெறக்கூடிய கெட்ட நோக்க வன்செயல் பிரசாரங்களில் யாரும் சிக்கிவிடாதபடி தடுக்க வேண்டும்.
தீவிர சித்தாந்த மனப்போக்குத் தொடர்பில் ஆக அண்மையில் வெளியான தகவல்கள், சிங்கப்பூரர்களை மேலும் ஒன்றிணைத்து பயங்கரவாதத்திற்கு எதிரான நம்முடைய அரணை மேலும் பலப்படுத்தும் என்று நம்புவோம்.