பெரியோர் பயன்படுத்தும் பழைய பொதுப் போக்குவரத்து கட்டண அட்டைகளுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டைகளுக்கு மாறும் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பழைய அட்டையைப் பயன்படுத்தும் ஒருவரின் கட்டண விவரம் அவர் போக்குவரத்துப் பயணத்தின் இறுதியில் தெரியாது.
புதிய அட்டையை அறிமுகப்படுத்தியதில் தமது அமைச்சின் அதிகாரிகள் தவறான முடிவு எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியதுடன் அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
இதிலிருந்து தமது அதிகாரிகள் பாடம் கற்றுக்கொள்வர் என்றும் எதிர்காலத்தில் இதைவிடச் சிறப்பாக செயல்படுவர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட சிம்பிளிகோ அட்டைகள் போல் அல்லாமல், தற்போது பெரியவர்கள் பயன்படுத்தும் ஈசிலிங்க், ஃபிளேஷ் பே அட்டைகள் குறைந்தது 2030ஆம் ஆண்டு வரையிலாவது தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவித்தார் அமைச்சர்.
அந்த அட்டைகளை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்கத் தேவையான புதிய கருவிகள், வன்பொருள் ஆகியவற்றுடன் கட்டண முறையைப் பராமரிக்க, அதை இன்னும் 6 ஆண்டுகளுக்கு நடைமுறையில் வைத்திருக்க தேவைப்படும் $40 மில்லியன் செலவையும் அரசாங்கம் ஏற்கும் என்று திரு சீ விளக்கினார். எனவே, இந்தச் செலவினம் பேருந்து, ரயில் கட்டணங்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
சிம்பிளிகோ கட்டண முறைக்கு மாற நிலப் போக்குவரத்து ஆணையம் எடுத்த முடிவு ஒரு பக்கம், அரசின் மேற்கூறப்பட்ட முடிவு, தவறான முடிவு எடுக்கப்பட்டது என தாமாக முன்வந்து அமைச்சர் கூறியது ஆகியவை பயணிகளை மேலும் அமைதி கொள்ளச் செய்துள்ளது என நம்பலாம்.
சிம்பிளிகோ கட்டண முறைக்கு எதிர்ப்புத் தெரிவிப்போரின் கவலை இரண்டு அம்சங்களைக் கொண்டது. அதில் முக்கியமான ஒன்று, பயணிகள் தாங்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்கு, பழைய கட்டண முறை போலல்லாது, புதிய அட்டையின்கீழ் செலுத்தும் கட்டணம் எவ்வளவு, அட்டையில் மீதமிருக்கும் தொகை எவ்வளவு என்பது தெரியாது என்பது.
திறன்பேசிவழி கட்டணம் எவ்வளவு, மீதமிருக்கும் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்றால் பயணிகள் அனைவரும் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்கள் அல்லர். மேலும், பயணிகளில் பலர் பயணம் மேற்கொள்ளும் போதும் சரி, பயண முடிவிலும் சரி, அட்டையில் எவ்வளவு மீதம் இருக்கிறது என்பதைத் உடனுக்குடன் தெரிந்துகொள்ளவே விரும்புவர்.
இவற்றைத் தாண்டி, பயணிகளிடையே மேலும் ஒரு கவலை எழுந்தது. தற்பொழுது ஈசிலிங்க், ஃபிளேஷ்பே அட்டைகள் பயன்படுத்துவோர் புதிய சிம்பிளிகோ அட்டையின் குறைந்த பயன்பாட்டு வசதியால் விரக்தியடைந்தனர். உதாரணத்துக்கு, புதிய கட்டண முறைக்கு மாறியபின், மேம்படுத்தப்பட்ட ஈசிலிங்க் அட்டைகளை வாகன நிறுத்த, மின்னியல் சாலைக் கட்டணங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது பிரச்சினையாக உருவெடுத்தது.
இந்த விவகாரம், போக்குவரத்து என்பது இன்னமும் உணர்வுபூர்வமான ஒன்றாக விளங்குவதை எடுத்துக் காட்டுகிறது. புதிய உச்சம் தொட்டுள்ள வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம், பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வு, மின்னியல் சாலைக் கட்டண 2.0 என்னும் இரண்டாம் கட்ட திட்டம் ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. போக்குவரத்துக் கொள்கை பலரை ஒரே சமயத்தில் பாதிப்பதால் மிகவும் முக்கியமான ஒன்று என்பதை மறக்கலாகாது.
சிம்பிளிகோ திட்டத்தில், நிலப் போக்குவரத்து ஆணையம் 2020ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுவரை 1,000 பயணிகளிடம் கருத்துக் கேட்டது. இதில் இன்னும் அதிகமான பயணிகளிடம் கருத்துக் கேட்டிருக்கலாம். இந்தக் கருத்துக் சேகரிப்பில் பயணிகள் தங்கள் கவலைகளை எடுத்துரைத்திருக்க வேண்டும். அத்துடன், ஆணையமும் சிம்பிளிகோ அட்டையின் பின்னணியில் இருக்கும் காரண, காரியங்களை விளக்கி, அதன் பயன்பாட்டிற்காக எவற்றை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் தெளிவாக விளக்கியிருக்கலாம். இதை ஆணையம் சிம்பிளிகோ அட்டை முடிவெடுக்குமுன் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சிங்கப்பூர் போக்குவரத்து முறையை எதிர்காலத்தில் மேம்படுத்தும்போது இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன், பயணிகளின் கருத்தைத் தெரிந்துகொண்டு செய்யப்படும் மாற்றங்கள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவது என்பதை தெளிவுற விளக்க வேண்டும்.